2 உருளைக்கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் 10 நிமிஷத்துல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. நொடியில் காலியாயிடும்...

Posted By:

Potato Omapodi Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு, அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் ஸ்நாக்ஸ் ஏதேனும் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா?

இதுவரை உருளைக்கிழங்கு வைத்து பஜ்ஜி, போண்டா என்று தான் செய்து கொடுத்திருப்பீர்கள். ஆனால் அந்த உருளைக்கிழங்கைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஓமபொடியை செய்யலாம் தெரியுமா? உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்படும் இந்த ஓமப்பொடி மிகவும் சுவையாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும்.

Potato Omapodi How To Make a Urulai Kilangu Omapodi

உங்களுக்கு உருளைக்கிழங்கு ஓமப்பொடி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு ஓமப்பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
* கடலை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* ஓமம் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 500 மிலி

செய்முறை:

* முதலில் உருளைக்கிழங்குகளை குக்கரில் போட்டு, அதில் கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்குகளை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த உருளைக்கிழங்குகளை கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் கடலை மாவு, 1/2 கப் அரிசி மாவு, 1 டீஸ்பூன் உப்பு, 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை தெளித்து, சப்பாத்தி மாவை விட சற்று தளர்வாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், ஒரு முறுக்கு உழக்கை எடுத்து, அதில் நிறைய துளைகளை கொண்ட அச்சை வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது அதனுள் வைத்து, எண்ணெயில் நேரடியாக பிழிந்துவிட வேண்டும். பின் முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு ஓமப்பொடி தயார். இதேப் போல் மீதமுள்ள மாவையும் பிழிந்து விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, March 12, 2025, 17:26 [IST]
Desktop Bottom Promotion