சிம்பிளான முறையில் உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?

Posted By:

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கை அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த உருளைக்கிழங்கை கொண்டு குருமா செய்து கொடுங்கள். இதுவரை நீங்கள் உருளைக்கிழங்கு குருமாவை வீட்டில் செய்திருக்கலாம்.

ஆனால் இந்த உருளைக்கிழங்கு குருமாவில் தேங்காய் அரைக்கும் போது, அத்துடன் ஒருசில மசாலா பொருட்களையும் சேர்த்து அரைப்பதால், இந்த குருமா சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும். முக்கியமாக இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, நாண், சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

Potato Kurma For Chapathi In Tamil

உங்களுக்கு உருளைக்கிழங்கு குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உருளைக்கிழங்கு - 4

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் - 1/2 டீஸ்பூன்

* சோம்பு - 1 டீஸ்பூன்

* மல்லி - 1 1/2 டீஸ்பூன்

* மிளகு - 6

* பட்டை - 1/2 இன்ச்

* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது)

* வெங்காயம் - 1 (நறுக்கியது)

* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

* தக்காளி விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்

* துருவிய தேங்காய் - 1 1/4 கப்

* முந்திரி - 6-8 (வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்தது)

* உப்பு - சுவைக்கேற்ப

* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 3 விசில் விட்டு இறக்கி, உருளைக்கிழங்கின் தோலுரித்து, கத்தியால் துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், மல்லி, சோம்பு, பட்டை, மிளகு, ஊற வைத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் துருவிய இஞ்சி மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி விழுதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 1/2 கப் அல்லது தேவையான அளவு நீரை ஊற்றி மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், உருளைக்கிழங்கு குருமா தயார்.

Image Courtesy: mrishtanna

[ of 5 - Users]
Story first published: Friday, March 24, 2023, 17:55 [IST]
Desktop Bottom Promotion