1/2 கப் வேர்க்கடலையும், 1/2 கப் பட்டாணியும் வெச்சு காலையில இந்த டிபனை செய்யுங்க.. சுவையானதும், சத்தானதும் கூட

Posted By:

Peanut Peas Adai Recipe In Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையிலும், அதே சமயம் சத்தான ஒரு டிபனை செய்ய நினைக்கிறீர்களா? வீட்டில் பச்சை வேர்க்கடலையும், பட்டாணியும் இருந்தால், அதை வெச்சு சூப்பரான சுவையில் அடை செய்து சாப்பிடுங்கள்.

இந்த வேர்க்கடலை பட்டாணி அடை இதுவரை நீங்கள் செய்திராத ஒன்றாக இருப்பதோடு, அருமையான சுவையுடனும் இருக்கும். இந்த அடையை வெறுமனே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடனும் சாப்பிடலாம். இந்த அடையை ஒருமுறை செய்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள் அந்த அளவில் ருசியாக இருக்கும்.

Peanut Peas Adai How To Make a Peanut Peas Adai Recipe

உங்களுக்கு இந்த வேர்க்கடலை பட்டாணி அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை பட்டாணி அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சை பட்டாணி - 1/2 கப்
* பச்சை வேர்க்கடலை - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 3
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்

வதக்குவதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி

செய்முறை:

* முதலில் பச்சை வேர்க்கடலை மற்றும் பட்டாணியை நீரில் குறைந்தது 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் சீரகம், கடுகு சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு முருங்கைக்கீரையை ஒரு கைப்பிடி சேர்த்து, கீரை சுருங்கும் வரை வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் ஊற வைத்த பச்சை வேர்க்கடலை மற்றும் பட்டாணியை சேர்த்து, அத்துடன் இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்ததை எடுத்துக் கொண்டு, அத்துடன் வதக்கி வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அதோடு சிறிது கொத்தமல்லி மற்றும் 3 டேபிள் ஸ்பூன் பச்சரிசி மாவை சேர்த்து கிளறி, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், நல்லெண்ணெய் ஊற்றி, பின் தயாரித்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி ஊற்றி, தட்டையாக கரண்டியால் பரப்பி விட்டு, நல்லெண்ணெயை மேலே ஊற்றி, மூடி வைத்து 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அடையை திருப்பிப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான வேர்க்கடலை பட்டாணி அடை தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, March 29, 2025, 7:00 [IST]
Desktop Bottom Promotion