தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..

Posted By:

Peanut Dosa With Kara Chutney Recipe In Tamil: காலையில் தோசை சுட மாவு இல்லையா? வீட்டில் வேர்க்கடலை உள்ளதா? அப்படியானால் அந்த வேர்க்கடலையை வைத்தே அட்டகாசமான சுவையில் ஒரு ஆரோக்கியமான தோசையை சுடலாம். இந்த வேர்க்கடலை தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். அத்துடன் தக்காளி கார சட்னியை சேர்த்து சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை தோசையுடன் கார சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை தோசையுடன் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Peanut Dosa With Kara Chutney How To Make a Peanut Dosa With Kara Chutney Recipe

தேவையான பொருட்கள்:

* பச்சை வேர்க்கடலை - 1 கப்
* இஞ்சி - 1 துண்டு
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கோதுமை மாவு - 1/2 கப்
* பச்சரிசி மாவு - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

சட்னிக்கு..

* பெரிய தக்காளி - 2
* வரமிளகாய் - 5
* இஞ்சி - சிறு துண்டு
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் சூடானதும், வேர்க்கடலையை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் காம்பு நீக்காத வரமிளகாய், தக்காளி, சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். வேர்க்கடலை நன்கு வெந்துவிட்டால், அது நீரில் மிதக்கத் தொடங்கும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு, நீரை வடிகட்டிவிட வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வேக வைத்த தக்காளி மற்றும் வரமிளகாயை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது வரமிளகாயின் காம்பை நீக்கிவிட வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, தேங்காய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னி தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால் சட்னி தயார். இந்த சட்னியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வேக வைத்த வேர்க்கடலை, இஞ்சி, சீரகம் சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் 1/2 கப் கோதுமை மாவு, 1/2 கப் அரிசி மாவை சேர்த்து சிறிது நீரை ஊற்றி மீண்டும் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், துருவிய கேரட், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தோசை சுடுவதற்கு ஏற்ற பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தடவி, அரைத்த மாவை ஒரு கரண்டி ஊற்றி, தோசையாக சுற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான வேர்க்கடலை தோசை தயார்.
* இந்த வேர்க்கடலை தோசையை கார சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்.

Image Courtesy: Amma samayal

[ of 5 - Users]
Story first published: Thursday, April 25, 2024, 8:03 [IST]
Desktop Bottom Promotion