1 கப் கடலைப்பருப்பு இருந்தா இந்த மாதிரி வித்தியாசமான போண்டா குழம்பு செய்யுங்க... டேஸ்ட் சூப்பரா இருக்கும்...!

Posted By:

Paruppu Bonda Masala Kulambu Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் கடலைப்பருப்பு உள்ளதா?

அப்படியானால் அந்த கடலைப்பருப்பை வைத்து ஒரு போண்டா தயாரித்து குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த பருப்பு போண்டா மசாலா குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும், மேலும் இது சப்பாத்தி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். இந்த பதிவில் பருப்பு போண்டா மசாலாக் குழம்பை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Paruppu Bonda Masala Kulambu Recipe How to Make Paruppu Bonda Masala Kulambu

தேவையான பொருட்கள்:

- கடலைப்பருப்பு - 200 கிராம்
- இஞ்சி - சிறிதளவு (2 இன்ச் அளவு)
- பூண்டு - 2 பல்
- சோம்பு - 1 டீ ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
- மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

குழம்புக்கு:

- எண்ணெய் - தேவையான அளவு (தாளிக்க)
- சோம்பு - 1 டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- தக்காளி - 1
- சிக்கன் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- கறி மசாலா தூள் - ½ டேபிள் ஸ்பூன்
- கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
- சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - ½ டம்ளர்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை:

- கடலைப்பருப்பு தண்ணீரில் அலசி சுத்தம் செய்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

- பின் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தோல் சீவி நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

- அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கொள்ளவும்.

- அதில் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் உருண்டைகளை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்துக்கவும்.

- குழம்பு தாளிக்க மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய விடவும்.

- அதில் சோம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.

- வெங்காயம் அரைப்பதம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

- பின் அதில் தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

- அதனுடன் சிக்கன் மசாலா தூள் மற்றும் கறி மசாலா தூள் சேர்த்து கிளறவும்.

- ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் சோள மாவை சேர்த்து ½ கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வதங்கும் மசாலா உடன் சேர்த்து கொள்ளவும்.

- நன்றாக கொதிக்க துவங்கியதும் தேவையான அளவு உப்பு மற்றும் பொரித்து வைத்த போண்டாவை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

- கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான பருப்பு போண்டா மசாலா ரெடி!

[ of 5 - Users]
Story first published: Monday, October 20, 2025, 22:27 [IST]
Desktop Bottom Promotion