ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Paneer Channa Salna Recipe In Tamil: புரட்டாசி மாதம் ஆரம்பித்துவிட்டது. அசைவ உணவை சாப்பிடாதவர்கள் இம்மாதத்தில் அதற்கு இணையான சுவையுடைய ரெசிபிக்களை செய்து சாப்பிட நினைப்பார்கள். அதுவும் பெரும்பாலும் காளான், மீல் மேக்கர் போன்றவற்றை தான் அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் கொண்டைக்கடலையும், பன்னீரையும் கொண்டு அற்புதமான சால்னா செய்யலாம் தெரியுமா? இந்த சால்னா சப்பாத்தி, இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

Paneer Channa Salna How To Make Veg Salna Recipe

உங்களுக்கு இந்த பன்னீர் சன்னா சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் சன்னா சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 6
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* பட்டை - சிறிய துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கல்பாசி - சிறிது
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (உடைத்தது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப் + தேவையான அளவு
* புதினா - 10-12 இலை
* வேக வைத்த கொண்டைக்கடலை - 200 கிராம்
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* அரைத்த தேங்காய் விழுது
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சோம்பு, முந்திரி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பொட்டுக்கடலை ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பிரியாணி இலை, கல்பாசி சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகி, இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, குறைவான தீயில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, 10-12 புதினா இலைகளை சேர்த்து மூடி வைத்து 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து கிளறி, பின் பன்னீரையும் சேர்த்து கலந்து, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான பன்னீர் சன்னா சால்னா தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, September 19, 2026, 20:10 [IST]
Desktop Bottom Promotion