அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...

Posted By:

Aval Dosa With Peanut Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் எப்போதும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? எப்போதும் ஒரே சுவையில் தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அப்படியானால் அந்த அவலைக் கொண்டு பஞ்சு போன்று மென்மையான தோசை சுடுங்கள். அதுவும் இந்த தோசைக்கு வேர்க்கடலை சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும். ஒருமுறை இந்த காம்போவை ட்ரை செய்து சாப்பிடுங்கள்.

Aval Dosa With Peanut Chutney How To Make This Healthy Breakfast

உங்களுக்கு அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் தோசை, வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

தோசைக்கு...

* பச்சரிசி - 2 கப்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* அவல் - 1 கப்
* தயிர் - 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு

வேர்க்கடலை சட்னிக்கு...

* வேர்க்கடலை - 3/4 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பூண்டு - 4 பல்
* வரமிளகாய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை எடுத்து, அத்துடன் வெந்தயத்தை சேர்த்து, அதில் நீரை ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மற்றொரு பாத்திரத்தில் அவலை எடுத்துக் கொண்டு, அத்துடன் தயிரை சேர்த்து கலந்து, 1 மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் ஊற வைத்த அரிசியையும், அவலையும் ஒன்றாக எடுத்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து மூடி வைத்து 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* மாவானது நன்கு ஊறிய பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, திருப்பி போடாமல் மூடி வைத்து வேக வைத்து எடுத்தால், அவல் தோசை தயார்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் வேர்க்கடலையில் உள்ள தோலை நீக்கி விட வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை, துருவிய தேங்காய், பூண்டு, வரமிளகாய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, September 19, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion