பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Beetroot Pasiparuppu Sambar Recipe In Tamil: மதியம் சாதத்துக்கு எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சாம்பார் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? இதுவரை பீட்ரூட்டைக் கொண்டு பொரியல் தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள்.

Beetroot Pasiparuppu Sambar How To Make Beetroot Sambar Recipe

ஆனால் அந்த பீட்ரூட்டைக் கொண்டும் சாம்பார் செய்யலாம் தெரியுமா? அதுவும் பாசிப்பருப்பு சேர்த்து செய்யும் சாம்பாரை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ளோர் பீட்ரூட் சாப்பிடமாட்டார்களானால், அவர்களுக்கு இப்படி பீட்ரூட் சாம்பார் செய்து கொடுக்கும் போது விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த பீட்ரூட் பாசிப்பருப்பு சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பீட்ரூட் - 3 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5-6 பல்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வேக வைத்த பீட்ரூட் பருப்பு
* துருவிய தேங்காய் - 1 கையளவு

செய்முறை:

* முதலில் குக்கரில் பொடியாக நறுக்கிய பீட்ரூட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பாசிப்பருப்பை 2 முறை கழுவி சேர்த்து, அத்துடன் கொத்தமல்லி, குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் பீட்ரூட் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த பீட்ரூட் பாசிப்பருப்பை சேர்த்து கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் 1 கையளவு துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பீட்ரூட் பாசிப்பருப்பு சாம்பார் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, September 19, 2026, 13:48 [IST]
Desktop Bottom Promotion