கிராமத்து சுவையில் பச்சை சுண்டைக்காய் சாம்பாரை எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Sundakkai Sambar Recipe In Tamil: இதுவரை நீங்கள் எத்தனையோ சாம்பார் செய்திருப்பீர்கள். ஆனால் சுண்டைக்காய் வைத்து சாம்பார் செய்துள்ளீர்களா? என்னது, சுண்டைக்காய் சாம்பாரா என்று நீங்கள் கேட்கலாம். பொதுவாக சுண்டைக்காய் வைத்து புளிக்குழம்பை தான் செய்வார்கள்.

ஆனால் இந்த சுண்டைக்காயைக் கொண்டு சாம்பார் செய்தால், அதில் உள்ள கசப்புச்சுவையும் தெரியாது, மணமும், சுவையும் அருமையாக இருக்கும். இந்த சுண்டைக்காய் சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

Pachai Sudaikkai Sambar How To Make a Sundakkai Sambar Recipe

உங்களுக்கு சுண்டைக்காய் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுண்டைக்காய் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சுண்டைக்காய் - 100 கிராம்

பருப்பு வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

சாம்பாருக்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* மாங்காய் - சிறிது (துண்டுகளாக்கப்பட்டது)
* சாம்பார் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* சுடுதண்ணீர் - தேவையான அளவு
* பச்சை மிளகாய் - 2
* புளி தண்ணீர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஊற வைத்த பருப்பை நீரில் 2 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் ஊற வைத்த துவரம் பருப்பை சேர்த்து, அத்துடன் 1 கப் தண்ணீர் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சுண்டைக்காயை கீறி விட்டு, எண்ணெயில் போட்டு, சுண்டைக்காயின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கி வேக வைக்க வேண்டும். சுண்டைக்காய் நன்கு வெந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய முருங்கைக்காய் மற்றும் மாங்காயை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கிய சுண்டைக்காயை சேர்த்து, நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் சாம்பார் தூளை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, பச்சை மிளகாயை சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடம் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, புளி தண்ணீரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பச்சை சுண்டைக்காய் சாம்பார் தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion