நாவூறும்.. பச்சை மொச்சை குருமா - இந்த மாதிரி ஒருடைம் செய்யுங்க.. மட்டன் குருமாவே தோத்துடும்...

Posted By:

Pachai Mochai Kurma Recipe In Tamil: தற்போது பச்சை மொச்சை சீசன் என்பதால் மார்கெட்டில் விலைக் குறைவில் அதிகம் விற்கப்படுவதைக் காணலாம். இந்த பச்சை மொச்சையை சீசன் இருக்கும் போதே சாப்பிட்டால் தான் உண்டு. ஏனெனில் மற்ற காலங்களில் காய்ந்த மொச்சை மட்டும் தான் கிடைக்கும். அதுவும் பச்சை மொச்சையின் சுவையே தனி. இதைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம்.

அதுவும் நீங்கள் சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக செய்ய நினைத்தால், பச்சை மொச்சை குருமாவை செய்யுங்கள். இந்த குருமா மட்டன் குருமாவிற்கு இணையான சுவையுடன் இருக்கும். இந்த குருமாவை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

Pachai Mochai Paruppu Kurma How To Make a Pachai Mochai Kurma Recipe

உங்களுக்கு பச்சை மொச்சை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை மொச்சை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மொச்சை - 200 கிராம்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 டம்ளர் + தேவையான அளவு
* கொத்தமல்லி - 1 கைப்பிடி

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1/2 கப்
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நிறம் மாற வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மொச்சையை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, 1 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், பூண்டு, இஞ்சி, சோம்பு, சீரகம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த தேங்காய் விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் மொச்சையுடன் சேர்த்து, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பையும் சேர்த்து கிளறி, 1 கைப்பிடி கொத்தமல்லியை சேர்த்து கலந்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான பச்சை மொச்சை குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, January 17, 2026, 19:36 [IST]
Desktop Bottom Promotion