கொளுத்தும் கோடையில் நுங்கு நன்னாரி சர்பத் செஞ்சு குடிங்க.. உடல் சூடும் குறையும், தாகமும் தணியும்..

Posted By:

Nungu Nannari Sarbath Recipe In Tamil: தற்போது அக்னி நட்சத்திர காலம் என்பதால் வெயில் ஆளை சுட்டெரிக்கும் வகையில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் மற்ற நேரத்தை விட மிகவும் கடுமையாக இருக்கும். அதுவும் வீட்டிற்குள் கூட இருக்க முடியாத அளவில் அனல் காற்று பயங்கரமாக வீசுகிறது. முக்கியமாக எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் தணியாமல் இருக்கும். சிலர் இந்த தாகத்தைத் தணிக்க இளநீர், சர்பத் போன்றவற்றை அருந்துவார்கள்.

Nungu Nannari Sarbath How To Make This Perfect Summer Drink To Beat The Heat

முக்கியமாக கோடை காலத்தில் பாரம்பரியமாக மக்கள் தங்கள் தாகத்தைத் தணிக்க அதிகம் குடிப்பது சர்பத்தை தான். இந்த சர்பத்தில் பல வெரைட்டிகள் இருந்தாலும், நன்னாரி சர்பத் தான் பிரபலமானது. நன்னாரி வேர்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த சர்பத், உடலை குளிர்ச்சியூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, இது உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து, நீண்ட நேரம் ஆற்றலுடன் இருக்கவும் உதவுகிறது.

இப்படிப்பட்ட நன்னாரி சர்பத்துடன் கோடைக்கால பழங்களுள் ஒன்றான மற்றும் கோடையில் மட்டுமே கிடைக்கக்கூடிய நுங்கு சேர்த்து உட்கொள்ளும் போது, சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். அதுவும் சர்பத் குடிக்கும் போது நுங்கை கடித்து சாப்பிடும் போது கிடைக்கும் அனுபவமே தனி தான். அதுமட்டுமின்றி, இந்த சர்பத்துடன் குளிர்ச்சியூட்டும் பண்புகளைக் கொண்ட சப்ஜா விதைகளை சேர்த்து சாப்பிடும் போது, உடல் சூடு குறையும்.

இந்த நுங்கு நன்னாரி சர்பத் ரெசிபி குறித்து sakarasaathamum_vadakarium என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த நுங்கு நன்னாரி சர்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நுங்கு நன்னாரி சர்பத் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நுங்கு - 5 துண்டுகள்
* வெல்லம்/சர்க்கரை/நாட்டுச் சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
* நன்னாரி சர்பத் - 1/4 கப்
* எலுமிச்சை சாறு - 3 டேபிள் ஸ்பூன்
* சப்ஜா விதைகள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* ஐஸ் கட்டிகள் - 4

செய்முறை:

* முதலில் 1 டீஸ்பூன் சப்ஜா விதைகளை 1/4 கப் நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பிளெண்டரில் நுங்கை சேர்த்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் வெல்லம்/சர்க்கரை/நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த நுங்கை சேர்த்து, அத்துடன் 1/4 கப் நன்னாரி சர்பத்தை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் 3 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஊற வைத்த சப்ஜா விதைகள், ஐஸ் கட்டிகளை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி நன்கு கலந்தால், சுவையான நுங்கு நன்னாரி சர்பத் தயார்.

குறிப்பு: இந்த சர்பத்தில் நுங்கை அரைத்து சேர்ப்பதற்கு பதிலாக, சிறு துண்டுகளாக வெட்டியும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சர்பத் இன்னும் சுவையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Thursday, May 21, 2026, 13:30 [IST]
Desktop Bottom Promotion