கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டது. இந்த பண்டிகையன்று உங்கள் வீட்டில் ஸ்பெஷலாக ஏதேனும் செய்ய நினைத்தால் வான்கோழி பிரியாணி செய்து சுவையுங்கள். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட. உங்களுக்கு வான்கோழி பிரியாணி எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு வான்கோழி பிரியாணியை எப்படி ஈஸியாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து கிறிஸ்துமஸ் அன்று செய்து சுவையுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

வான்கோழி - 2-4 பெரிய துண்டுகள்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
நாட்டுத் தக்காளி - 1 (அரைத்தது)
புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
கல் உப்பு - சிறிது
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்

பிரியாணிக்கு...

பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை மிளகாய் - 6 (நீளமாக கீறியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
புதினா - 1 கைப்பிடி அளவு
கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு
நெய் - 1 கப்

தாளிப்பதற்கு...

கிராம்பு - 3
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 6
பிரியாணி இலை - 3
அன்னாசிப்பூ - 2
உலர்ந்த ரோஜாப்பூ இதழ் - சிறிது
குங்குமப்பூ - சிறிது

செய்முறை:

முதலில் வான்கோழியை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ளவும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறி, பின் ஊற வைத்துள்ள வான் கோழியை சேர்த்து கிளறி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரிசியைப் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மிதமான தீயில் குக்கரை மூடி விசில் போடாமல் 10 நிமிடம் வைத்து இறக்கினால், வான்கோழி பிரியாணி ரெடி!!!

Desktop Bottom Promotion