செட்டிநாடு நாட்டுக்கோழி வறுவல்

By Maha

அனைவருக்குமே செட்டிநாடு ரெசிபிக்களை பற்றி தெரியும். குறிப்பாக இந்த செட்டிநாடு ரெசிபிக்களானது அதன் நறுமணம் மற்றும் சுவையால் மிகவும் பிரபலமானது. இங்கு அந்த செட்டிநாடு ரெசிபிக்களில் ஒன்றான நாட்டுக்கோழி வறுவல் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் எந்த ஒரு மசாலாவும் சேர்க்காமல் செய்வது தான். இருப்பினும் இதன் சுவை அருமையாக இருக்கும்.

அதைப் படித்து வீட்டில் முயற்சி செய்து, அதன் சுவை எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

Chettinad Nattu Kozhi Varuval

தேவையான பொருட்கள்:

நாட்டுக்கோழி - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
இஞ்சி - 1/2 இன்ச் (தட்டியது)
பூண்டு - 20 பற்கள் (தட்டியது)
தக்காளி - 1
வரமிளகாய் - 10
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:

முதலில் நாட்டுக்கோழியை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வரமிளகாயை இரண்டாக உடைத்து போட்டு, பின் அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கி விட வேண்டும்.

அடுத்து, அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

பின் மூடியை திறந்து தீயை அதிகரித்து, சிக்கனில் உள்ள தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறி விட்டு, கொத்தமல்லியை தூவி இறக்கினால், செட்டிநாடு நாட்டுக்கோழி வறுவல் ரெடி!!!

Story first published: Tuesday, May 6, 2014, 12:35 [IST]
Desktop Bottom Promotion