தோசைக்கு ஒருடைம் இப்படி கார சட்னியை செய்யுங்க... வீட்டுல எல்லாரும் 2 தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Nellore Special Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் தோசை சுடப்போகிறீர்களா? அந்த தோசைக்கு செம சூப்பரான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கார சட்னியை செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்யும் கார சட்னியை செய்யாமல், நெல்லூர் ஸ்பெஷல் கார சட்னியை செய்யுங்கள்.

இப்படி கார சட்னியை செய்யும் போது, வீட்டில் உள்ளவர்கள் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அதுவும் இந்த கார சட்னியை தோசையுடன் தொட்டு சாப்பிடாமல், தோசையில் தடவி நெய் ஊற்றி ரோஸ்ட் செய்து சாப்பிடுங்கள். இதனால் 2 தோசை சாப்பிடுபவர்கள் இன்னும் 2 தோசை அதிகமாக சாப்பிடுவார்கள்.

Nellore Special Kara Chutney How To Make a Nellore Kara Chutney Recipe

உங்களுக்கு இந்த நெல்லூர் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லூர் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* காஷ்மீரி மிளகாய் - 6
* வரமிளகாய் - 15
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* நாட்டுச்சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் காஷ்மீரி வரமிளகாயை சுடுநீரில் சிறிது நேரம் ஊற வைத்துள்ள கொள்ள வேண்டும்.
* அதேப் போல் வரமிளகாயையும் சுடுநீரில் சிறிது நேரம் ஊற வைத்துள்ள கொள்ள வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த காஷ்மீரி வரமிளகாய் மற்றும் வரமிளகாயை போட்டு, அத்துடன் மிளகாய் ஊற வைத்த நீரை 1/4 கப் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு பற்களை சேர்த்து, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவ வேண்டும்.
* பின் அதில் நாட்டுச்சர்க்கரையை 1/2 டீஸ்பூன் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுதை சேர்த்து 4-5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான நெல்லூர் கார சட்னி தயார்.

குறிப்பு: இந்த கார சட்னியை வெறுமனே தோசையுடன் தொட்டு சாப்பிடுவதற்கு பதிலாக, தோசையை ஊற்றி, அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி, தோசை வெந்ததும், அதன் மேல் இந்த கார சட்னியை வைத்து பரப்பி, நெய்யை ஊற்றி, தோசை பொன்னிறமானதும், தோசையை அப்படியே மடித்து எடுத்தால், சுவையான நெல்லூர் நெய் ரோஸ்ட் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, March 31, 2025, 7:00 [IST]
Desktop Bottom Promotion