மரவள்ளிக்கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..

Posted By:

Maravalli Kilangu Puttu Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியைப் போக்க ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் எப்போதும் எண்ணெயில் பொரித்து கொடுக்காமல், சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் மரவள்ளிக்கிழங்கு உள்ளதா? ஆனால் உங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அந்த மரவள்ளிக்கிழங்கைக் கொண்டு புட்டு செய்து கொடுங்கள். இந்த மரவள்ளிக்கிழங்கு புட்டு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சத்தானதும் கூட. இப்படி குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் போது, பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Maravalli Kilangu Puttu How To Make a Maravalli Kilangu Puttu

உங்களுக்கு மரவள்ளிக்கிழங்கு புட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மரவள்ளிக்கிழங்கு புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
* ரவை - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10 (பொடியாக நறுக்கியது)
* பாதாம் - 10 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் மரவள்ளிக்கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் துருவிய மரவள்ளிக்கிழங்குடன் 1/4 கப் ரவை, 1 கப் துருவிய தேங்காய், 1 சிட்டிகை உப்பு, 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 1/2 கப் சர்க்கரை, 1/4 கப் அரிசி மாவை சேர்க்க வேண்டும்.
* பின் கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாமை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பிறகு வறுத்த முந்திரி பாதாமை அப்படியே துருவிய கிழங்குடன் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
* பிறகு இட்லி தட்டின் குழிகளில் வாழை இலையை விரித்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு குழிக்கரண்டியில் நெய்யை தடவி, மரவள்ளிக்கிழங்கு கலவையை எடுத்து வாழை இலையில் வைக்க வேண்டும். இப்படி அனைத்து குழிகளிலும் கிழங்கு கலவையை வைக்க வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தில் அந்த இட்லி தட்டை வைத்து மூடி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மரவள்ளிக்கிழங்கு புட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, December 8, 2025, 19:06 [IST]
Desktop Bottom Promotion