இந்த மகா சிவராத்திரிக்கு சர்க்கரைவள்ளி கிழங்கு வெச்சு இப்படி ஸ்வீட் செய்யுங்க.. செமயா இருக்கும்...

Posted By:

Maha Shivratri 2026 Special Sweet Potato Poli Recipe: ஈசனுக்கு உரிய மகா சிவராத்திரி வரப்போகிறது. இந்நாளில் சிவபக்தர்கள் விரதமிருந்து இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானுக்கு பூஜைகளை செய்து வழிபாடு செய்வார்கள். மேலும் மகா சிவராத்திரி நாளில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு செய்வது வழக்கம்.

இந்த சிவராத்திரியில் நீங்கள் ஒரு ஸ்பெஷலான சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போளியை செய்யுங்கள். இந்த போளி ருசியாக இருப்பதோடு, நன்கு மென்மையாகவும் இருக்கும்.

Maha Shivratri 2026 Special Recipe How To Make Sweet Potato Poli

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு போளியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரைவள்ளிக் கிழங்கு போளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மைதா - 1 கப் அல்லது 100 கிராம்
* உப்பு - 1 சிட்டிகை
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன் + 3 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

வேக வைப்பதற்கு...

* சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2-3
* தண்ணீர் - தேவையான அளவு

பூரணத்திற்கு...

* பொடித்த வெல்லம் - 3/4-1 கப் அல்லது 75-100 கிராம்
* தண்ணீர் - 1/2 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப் அல்லது 100 கிராம்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை எடுத்து, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 2 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மூடி வைத்து 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குக்கரில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்த்து, கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிழங்கை வெளியே எடுத்து, அதன் தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின் அந்த கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் நெய்யை ஊற்றி, துருவிய தேங்காயை சேர்த்து 1-2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
* பின் அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்ல நீரை ஊற்றி, 1 சிட்டிகை உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பூரணத்தில் உள்ள நீர் வற்றியதும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாழை இலை அல்லது எண்ணெய் கவரை எடுத்து, அதில் சிறிது எண்ணெய் தடவி, கைகளிலும் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது எடுத்து உருட்டி வைத்து, தட்டையாக தட்டி, பின் நடுவே பூரணத்தை சிறிது எடுத்து உருட்டி வைத்து, மாவால் மடித்து விட வேண்டும்.
* பின் மீண்டும் தட்டையாக தட்டி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் போளிகளாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒவ்வொரு போளியையும் போட்டு, எண்ணெய் தடவி சப்பாத்தி போன்று முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு போளி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, February 12, 2026, 21:10 [IST]
Desktop Bottom Promotion