தோசை மாவு ரொம்ப புளிச்சு போச்சா? அப்ப அதை தூக்கி போடாம இப்படி செஞ்சு சாப்பிடுங்க...

Posted By:

Leftover Dosa Batter Rava Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் தோசை மாவு ரொம்ப புளித்துவிட்டதா? புளித்த தோசை மாவை தூக்கி போட மனமில்லையா? அப்படியானால் அந்த புளித்த தோசை மாவுடன் ஒருசில பொருட்களை சேர்த்து கலந்து, தோசை சுடும் போது அந்த புளிப்புச் சுவை தெரியாது.

சொல்லப்போனால் புளித்த மாவுடன் சில பொருட்களை கலந்து தோசை சுடும் போது, அந்த தோசை மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் அத்துடன் தேங்காய் சட்னியை சேர்த்து சாப்பிடும் போது இன்னும் சுவையாக இருக்கும். அவசர காலத்தில் இந்த மாதிரியான தோசை கைகொடுக்கும்.

Leftover Dosa Batter Rava Dosa How To Make a Leftover Dosa Batter Rava Dosa Recipe

உங்களுக்கு புளித்த மாவைக் கொண்டு எப்படி சுவையான தோசையை சுடுவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புளித்த மாவைக் கொண்டு எப்படி சுவையான தோசை சுடுவது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* புளித்த மாவு - 2 கப்
* ரவை - 1 கப்
* தண்ணீர் - 1 1/4 கப்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் 1 கப் ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 1/4 கப் நீரை ஊற்றி கலந்து, 10 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து, ஊற வைத்த ரவையை மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் புளித்த தோசை மாவை எடுத்து, அத்துடன் அரைத்த ரவை, மைதா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் துருவிய கேரட்டை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் சீரகம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* மாவானது கெட்டியாக இருந்தால், அதில் சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி ஊற்றி தோசையாக சுற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், தோசை தயார். முக்கியமாக இந்த தோசை மொறுமொறுவென்று இருக்காது, மென்மையாகவே இருக்கும்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Wednesday, May 15, 2024, 7:28 [IST]
Desktop Bottom Promotion