மதுரை கோனார் கடை குடல் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...

Posted By:

Madurai Konar Kadai Kudal Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி ஆட்டுக் குடலை வாங்கி சமைப்பீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் குடல் குழம்பு செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை மதுரை கோனார் கடை குடல் குழம்பை செய்யுங்கள். இப்படி குடல் குழம்பு செய்யும் போது, அது இட்லி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த பக்குவத்தில் குழம்பு செய்தால், கவுச்சு நாற்றம் எதுவும் வீசாமல், குழம்பு நல்ல மணத்துடன் இருக்கும்.

உங்களுக்கு மதுரை கோனார் கடை குடல் குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை கோனார் கடை குடல் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Kudal Salna How To Make a Madurai Konar Kadai Kudal Kuzhambu

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 1 1/2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* புதினா - 1 கைப்பிடி
* கல்பாசி - 1 துண்டு
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* ஆட்டுக்குடல்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 2 ஸ்பூன்
* முந்திரி - 10
* கிராம்பு - 3
* கல்பாசி - சிறிய தண்டு
* பட்டை - 2
* பூண்டு - 8 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 1 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* தேங்காய் - 1/4 மூடி (பொடியாக நறுக்கியது)
* சோம்பு - 2 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஆட்டுக்குடலை பொடியாக நறுக்கி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சுடுநீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், முந்திரி, கிராம்பு, கல்பாசி, பட்டை, பூண்டு, இஞ்சி, சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை சேர்த்து, நன்கு கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் 2 சிட்டிகை சோம்பு சேர்த்து முதலில் அரைத்து, பின் அதில் வதக்கி வைத்துள்ளதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், புதினா, கல்பாசி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேறப் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள ஆட்டுக்குடலை சேர்த்து நன்கு 5 நிமிடம் நீர்விட்டு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் குழம்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, 7-8 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மதுரை கோனார் கடை குடல் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, December 7, 2025, 14:23 [IST]
Desktop Bottom Promotion