கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் இனிப்பு சீடை.. வெடிக்காமல், சாஃப்ட்டா எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Krishna Jayanthi Special Sweet Seedai Recipe: கிருஷ்ண ஜெயந்தி இன்னும் ஓரிரு நாட்களில் வரப்போகிறது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பலரும் வீடுகளில் பலவிதமான கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து கிருஷ்ணரை வழிபடுவார்கள். அதில் கிருஷ்ண ஜெயந்திக்கு பெரும்பாலானோர் வீடுகளில் செய்யக்கூடிய ஒரு பலகாரம் தான் சீடை.

இந்த சீடையில் உப்பு சீடை, இனிப்பு சீடை என இரண்டு வெரைட்டிகள் உள்ளன. அதில் இனிப்பு சீடையை குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் சீடையை வீட்டில் பலரும் அஞ்சுவார்கள். ஏனெனில் அது வெடிக்கும். சீடை வெடிக்காமல் இருக்க வேண்டுமானால், மாவை சரியான பதத்தில் உருட்ட வேண்டும்.

Krishna Jayanthi Special Recipe How To Make a Sweet Seedai

உங்களுக்கு இனிப்பு சீடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இனிப்பு சீடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* பச்சரிசி மாவு - 2 கப்
* உளுந்து மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் வெல்லத்தைப் போட்டு, அதில் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை நன்கு கரைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் சல்லடையை வைத்து, அதில் பச்சரிசி மாவு, உளுந்து மாவு சேர்த்து, அவற்றை சலித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் எள்ளு விதைகள், துருவிய தேங்காய், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்து, கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் வெல்ல நீரை வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஸ்பூன் கொண்டு சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
* பின் கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் மாவை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, மீண்டும் ஒருமுறை பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து லேசாக விரிசல் இருக்குமாறு உருட்டிக் கொள்ள வேண்டும். இப்படி விரிசலுடன் உருட்டும் போது, சீடை வெடிக்காமல் இருக்கும். அதேப் போல் நன்கு அழுத்தியும் மாவை உருட்டக்கூடாது. இதேப் போன்று அனைத்து மாவையும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், உருட்டிய உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இனிப்பு சீடை தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Saturday, August 24, 2024, 18:31 [IST]
Desktop Bottom Promotion