1 கப் அவல் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு 10 நிமிஷத்துல சூப்பர் ஸ்வீட் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..

Posted By:

Krishna Jayanthi Special Aval Payasam Recipe: கிருஷ்ண ஜெயந்திக்கு உங்கள் வீட்டில் நிறைய பலகாரங்களை செய்து கிருஷ்ணருக்கு படைத்து வழிபடும் பழக்கம் உள்ளதா? அப்படியானால் இதில் கிருஷ்ணர் விரும்பி சாப்பிடும் அவல், பால் பொருட்கள், வெண்ணெய் போன்றவற்றைக் கொண்டு தான் நிறைய பலகாரங்களை செய்வீர்கள்.

ஒரு பண்டிகை என்றால் நிச்சயம் அதில் பாயாசம் இருக்கும். பாயாசம் இல்லாமல் எந்த ஒரு பண்டிகையும் முழுமையடையாது. அந்த வகையில் இந்த கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு பிடித்த அவல் கொண்டு ஒரு பாயாசம் செய்யுங்கள். இந்த பாயாசம் 10 நிமிடத்தில் சட்டென்று செய்யக்கூடியவாறு இருக்கும். மேலும் இந்த பாயாசத்தை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Krishna Jayanthi Special Recipe How To Make a Aval Payasam

உங்களுக்கு அவல் பாயாசத்தை எப்படி 10 நிமிடத்தில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* குங்குமப்பூ - 1 சிட்டிகை
* வெதுவெதுப்பான பால் - சிறிது
* வெல்லம் - 3/4 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* நெய் - 2 டீஸ்பூன்
* முந்திரி - 10
* உலர் திராட்சை - 10
* அவல் - 1 கப்
* கெட்டியான பால் - 3/4 லிட்டர்
* பாதாம் பால் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு கிண்ணத்தில் குங்குமப்பூவை எடுத்து, சிறிது வெதுவெதுப்பான பாலை ஊற்றி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை எடுத்து, நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் அவலை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் காய்ச்சாத கெட்டியான பாலை ஊற்றி, அத்துடன் ஊற வைத்த குங்குமப்பூ பாலையும் சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து, வேக வைக்க வேண்டும்.
* ஒரு கொதி வந்ததும், அதில் பாதாம் பால் பவுடரை சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து 7 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, அவலை வேக வைக்க வேண்டும்.
* அவல் நன்கு வெந்ததும், அதில் ப்ரை செய்த முந்திரி, திராட்சையை சேர்த்து, அத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி, அடுப்பை உடனே அணைத்துவிட்டு கிளறினால், சுவையான அவல் பாயாசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, August 16, 2025, 14:07 [IST]
Desktop Bottom Promotion