வாரம் 2 முறை கொள்ளுவை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. கொலஸ்ட்ராலும், உடல் எடையும் வேகமா குறையும்...

Posted By:

Kollu Sambar Recipe In Tamil: நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் இருக்கிறீர்களா? உங்கள் எடையை சிரமப்படாமல் ருசியான உணவுகளுடன் குறைக்க நினைக்கிறீர்களா? அப்படியானல் உடல் கொழுப்பைக் கரைக்க உதவும் உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். அப்படி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவும் ஒரு பொருள் தான் கொள்ளு.

இந்த கொள்ளு விதைகளைக் கொண்டு கஞ்சியாகவோ, கடையலாகவோ செய்து சாப்பிடலாம். ஆனால் இன்னும் ருசியாக செய்து சாப்பிட நினைத்தால், கொள்ளு சாம்பார் செய்து சாப்பிடுங்கள். அதுவும் இது இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இதை பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் சாப்பிடலாம்.

Kollu Sambar How To Make a Kollu Sambar Recipe

உங்களுக்கு கொள்ளு சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொள்ளு சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 50 கிராம்
* கொள்ளு - 50 கிராம்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கத்திரிக்காய் - 1/4 கிலோ (துண்டுகளாக்கப்பட்டது)
* முருங்கைக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* சாம்பார் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு விதைகளை சேர்த்து, லேசாக நிறம் மாற வறுத்து ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் துவரம் பருப்பை சேர்த்து லேசாக நிறம் மாற வறுத்து, அதையும் ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* இரண்டு பருப்புக்களும் நன்கு குளிர்ந்த பின், மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதுவும் சிறிது நேரம் மூடி வைத்து காய்கறிகளை வேக வைக்க வேண்டும். அப்படி செய்யும் போது காய்கறிகள் வேகமாக வெந்துவிடும்.
* கத்திரிக்காய் வெந்ததும், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்கி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சாம்பாருக்கு தேவையான அளவு சுடுநீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காயை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்த தேங்காயை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* சாம்பார் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், சிறிது புளிச்சாற்றினை சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் நன்கு கொதித்ததும், அதை இறக்கிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எணணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, சாம்பாருடன் சேர்த்து கிளறினால், சுவையான கொள்ளு சாம்பார் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, October 13, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion