வீட்டுல புளிச்ச தயிர் நிறைய இருக்கா? இந்த மாதிரி மோர் குழம்பு செய்யுங்க.. சாதத்துக்கு சூப்பரா இருக்கும்..

Posted By:

Kerala Style Moru Kuzhambu: புரட்டாசி மாதம் மட்டுமின்றி, நவராத்திரி கொலு வேறு தொடங்கிவிட்டது. இதனால் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் அசைவ உணவை சமைக்கமாட்டார்கள். உங்கள் வீட்டிலும் அப்படியென்றால் தினமும் என்ன சமைப்பது என்று தெரியாமல் பலரும் பல மணிநேரம் யோசிக்கலாம். உங்களின் வசதிக்காக இன்று ஒரு அட்டகாசமான மற்றும் எளிமையான ரெசிபி ஒன்றை கொடுத்துள்ளோம். அது தான் கேரளா ஸ்டைல் மோர் குழம்பு.

உங்கள் வீட்டில் புளித்த தயிர் அதிகமாக இருந்தால், இந்த குழம்பை செய்யுங்கள். இது சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

Kerala Style Moru Kuzhambu Recipe

உங்களுக்கு கேரளா ஸ்டைல் மோர் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் மோர் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* புளித்த தயிர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

தேங்காய் சேர்ந்த மோர் குழம்பிற்கு...

* மோர் - 1 கப்
* தேங்காய் - 1/2 கப்
* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கடுகு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

மோர் குழம்பு செய்யும் முறை...

* முதலில் மிக்சர் ஜாரில் தயிரை ஊற்றி, உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி, அடுப்பை அணைத்துவிட்டு, அடித்து வைத்துள்ள தயிரை ஊற்றி கிளறி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மோர் குழம்பு தயார்.

தேங்காய் சேர்த்த மோர் குழம்பு செய்யும் முறை...

* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், மல்லி விதைகள், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியில் மோரை ஊற்றி, பின் அதை அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 3 நிமிடம் சூடேற்றி, இறக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றினால், சுவையான தேங்காய் சேர்த்த மோர் குழம்பு தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Story first published: Sunday, October 15, 2023, 12:48 [IST]
Desktop Bottom Promotion