4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும்

Posted By:

Coimbatore Style Thakkali Kurma Recipe in Tamil: இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்து விட்டதா? அப்படியானால் தக்காளி ஒருமுறை கோயம்புத்தூர் ஸ்டைல் தக்காளி குருமாவை செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று தக்காளி குருமா செய்யாமல், ஒருமுறை மசாலா அரைத்து தக்காளி குருமாவை செய்யுங்கள். இந்த குருமா இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

Coimbatore Style Thakkali Kurma Recipe How to Make at Home in Tamil

இந்த குருமா சிக்கன் குருமாவை போன்று இருப்பதால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த கோயம்புத்தூர் ஸ்டைல் தக்காளி குருமாவை செய்வது மிகவும் எளிதானது. இந்த குருமா கொங்கு பகுதிகளில் மிகவும் பிரபலமானது

உங்களுக்கு கோயம்புத்தூர் ஸ்டைல் தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோயம்புத்தூர் ஸ்டைல் தக்காளி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள.

தேவையான பொருட்கள்:

- தக்காளி - 4 பெரியது (நறுக்கியது)
- சின்ன வெங்காயம் - 15 (தோல் நீக்கியது)
- சீரகம் - 1 ஸ்பூன்
- தனியா விதை - 1 ஸ்பூன்
- வர மிளகாய் - 4
- மிளகு - 10
- பூண்டு - 4 பல்
- மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
- சாம்பார் தூள் - ½ ஸ்பூன்
- மல்லித் தூள் - 1 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - ½ கப்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 5
- கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

- ஒரு கடாயில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி, சீரகம், தனியா விதை, வர மிளகாய், மிளகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

- பின் தோல் உரித்த சின்ன வெங்காயம் மற்றும் 4 பூண்டு பற்களைச் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகி மென்மையாகும் வரை வதக்கவும்.

- இப்போது நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், சாம்பார் தூள், கொத்தமல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

- தக்காளி மென்மையாகி குழைந்தும் போகும் வரை சமைக்கவும்.

- அதன்பின் ப்ரெஷாக துருவிய தேங்காயைச் சேர்த்து, மேலும் 2 நிமிடங்கள் வதக்கி, அடுப்பை அணைத்துவிடவும்.

- இந்த கலவையை ஆறவிட்டு, பின்னர் மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும். கலவையை ஒரு முறை அரைத்த பிறகு, சுமார் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, மேலும் மென்மையாகும் வரை அரைக்கவும்.

- பின்னர் மற்றொரு கடாயில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.

- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும்.

- பின்னர் அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.

- சுமார் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

- மிதமான நெருப்பில் 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்தால் அட்டகாசமான கோயம்புத்தூர் ஸ்டைல் தக்காளி குருமா ரெடி!

[ of 5 - Users]
Story first published: Friday, June 26, 2026, 20:52 [IST]
Desktop Bottom Promotion