அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா?

Hair Care Tips In Tamil: தற்போது தலைமுடி குறித்த கவலை நிறைய பேருக்கு உள்ளது. ஏனெனில் இன்று தலைமுடி உதிர்வு பிரச்சனை ஏராளமானோர் சந்திக்கிறார்கள். இதன் விளைவாக தலைமுடியின் அடர்த்தி குறைவதோடு, பலருக்கு முடி எலிவால் போன்றும், ஆங்காங்கு சொட்டையாகவும் தெரிகிறது. இதைத் தவிர்க்க வேண்டுமானால் தலைமுடிக்கு போதுமான பராமரிப்பைக் கொடுக்க வேண்டும்.

Hair Care Tips How To Make Homemade Hibiscus Oil For Hair Growth

அதுவும் பாரம்பரியமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய சில எண்ணெய்களை பயன்படுத்தி வந்தால், தலைமுடியின் வளர்ச்சியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, தலைமுடியும் அடர்த்தியாவதைக் காணலாம். அப்படி நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு எண்ணெய் தான் செம்பருத்தி எண்ணெய். இந்த எண்ணெயை வீட்டிலேயே தயாரித்து தினசரி பயன்படுத்தி வந்தால், தலைமுடியில் எதிர்பார்த்த மாற்றத்தைக் காணலாம்.

இந்த எண்ணெயை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் பாரம்பரியமாக தலைமுடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க பயன்படுத்தப்பட்டவை ஆகும். கூடுதலாக இந்த எண்ணெய் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, பயன்படுத்தவும் வசதியாக இருக்கும்.

செம்பருத்தி எண்ணெய் ஏன் தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்தது?

செம்பருத்தியில் உள்ள வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை தலைமுடி உதிர்வை நிறுத்தி, வேர்க்கால்களை வலுவாக்குகின்றன. அதுவும் இந்த செம்பருத்தியில் உள்ள அமினோ அமிலங்கள், முடியின் வளர்ச்சியை இயற்கையாவே அதிகரிக்கும். கூடுதலாக இதில் உள்ள பண்புகள், தலைமுடி வறட்சியை தடுத்து, முடியை பட்டுப் போன்று மென்மையாக்கும்.

முக்கியமாக இந்த எண்ணெயை தயாரிக்க பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் பாரம்பரியமாக தலைமுடி பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டுகிறது. அதுவும் இந்த எண்ணெய் தலைமுடியின் புரோட்டீன் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து, ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

அதுமட்டுமல்லாமல், இந்த எண்ணெயில் சேர்க்கப்படும் வெந்தயம், தலைமுடி வளர்ச்சிக்கு நல்லது. ஏனெனில் அதில் இரும்புச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகமாக உள்ளன. இவ்விரண்டுமே தலைமுடி வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். மேலும் இந்த விதைகளில் அழற்சி எதிர்ப்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனால் ஸ்கால்ப்பில் தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

செம்பருத்தி எண்ணெயை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் - 1 கப்
* செம்பருத்தி பூ - 3-4
* செம்பருத்தி இலை
* வெந்தயம் -1 டீஸ்பூன்
* கருஞ்சீரகம் - சிறிது
* கறிவேப்பிலை - கைப்பிடி

தயாரிக்கும் முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயுடன், அனைத்து பொருட்களையும் சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாகும் வரை வறுத்து வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு கண்ணாடி பாட்டிலில் எண்ணெயை வடிகட்டி ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி பயன்படுத்துவது?

* முதலில் சிறிது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் தலைமுடியில் ஸ்கால்ப்பில் படும்படி தடவ வேண்டும்.
* பின் 5-10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, June 26, 2026, 22:29 [IST]
Desktop Bottom Promotion