உடலுக்கு வலுசேர்க்கும் கருப்பு உளுந்து கருப்பட்டி கஞ்சி - எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Karuppu Ulunthu Karupatti Kanji Recipe In Tamil: தற்போது மக்கள் பாரம்பரிய உணவுகளின் மகிமையை உணர்ந்து, அவற்றை தங்களின் உணவுகளில் சேர்த்து வருகின்றனர். நமது பாரம்பரிய உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு பொதுவான பொருள் தான் உளுத்தம் பருப்பு. அந்த உளுத்தம் பருப்பில் பலரும் தோல் நீக்கப்பட்டதையே பயன்படுத்துகின்றனர்.

ஆனால் தோல் நீக்கப்பட்டதை விட, தோலுடன் இருக்கும் உளுத்தம் பருப்பில் தான் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த வகையான உளுத்தம் பருப்பை உணவில் சேர்த்தால் தான், அதன் முழு பலனைப் பெற முடியும். அதுவும் கருப்பு உளுத்தம் பருப்பைக் கொண்டு, கருப்பட்டி சேர்த்து கஞ்சி தயாரித்து குடித்து வந்தால், உடல் வலுபெறும். குறிப்பாக இந்த கஞ்சியை காலை, மாலை வேளைகளில் குடித்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

Karuppu Ulunthu Karupatti Kanji How To Make a Karuppu Ulunthu Karupatti Kanji Recipe

உங்களுக்கு கருப்பு உளுந்து கருப்பட்டி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கிழே கருப்பு உளுந்து கருப்பட்டி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கஞ்சி பவுடருக்கு...

* கருப்பு உளுத்தம் பருப்பு - 2 கப்
* பச்சரிசி - 1/2 கப்

கஞ்சிக்கு...

* கஞ்சி பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* கருப்பட்டி - சுவைக்கேற்ப
* ஏலக்காய் பொடி- 1/2 டீஸ்பூன்
* சுக்குப்பொடி - 1/4 டீஸ்பூன்
* காய்ச்சிய பால் - 100 மிலி
* நெய்யில் வதக்கிய துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் கஞ்சிக்கு வேண்டிய பவுடரை தயார் செய்து கொள்ளுங்கள். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து நல்ல மணம் வந்து, நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் பச்சரிசியை சேர்த்து, அதையும் லேசாக நிறம் மாற வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த கருப்பு உளுத்தம் பருப்பு மற்றும் பச்சரிசியை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த பொடியை சல்லடை கொண்டு சலித்துவிட்டு, பின் அந்த கஞ்சி பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டுக் கொள்ளுங்கள். இந்த பொடியை 1 மாதம் வரை பயன்படுத்தலாம்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 4 டேபிள் ஸ்பூன் கஞ்சி பொடியை போட்டு, அத்துடன் 4 கப் நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை அடுப்பில் வைத்து, 5 நிமிடம் நன்கு காய்ச்ச வேண்டும். இப்படி காய்ச்சும் போது கஞ்சி சற்று கெட்டியாகத் தொடங்கும். அப்போது கருப்பட்டியை சிறிது நீரில் கரைத்து வடிகட்டி, அதை கஞ்சியுடன் சேர்த்து கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் காய்ச்சிய பாலை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக துருவிய தேங்காயை 3 டேபிள் ஸ்பூன் எடுத்து, 1 டீஸ்பூன் நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதை கஞ்சியுடன் சேர்த்து கலந்தால், சுவையான கருப்பு உளுந்து கருப்பட்டி கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, February 12, 2025, 20:12 [IST]
Desktop Bottom Promotion