இந்த கஞ்சியை காலையில் 1 கப் என வாரத்துக்கு 3 முறை குடிங்க.. எலும்புகளும் வலுபெறும்.. ருசியானதும் கூட..

Posted By:

Karuppu Ulunthu Kanji Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை உணவை சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒரு அற்புதமான கஞ்சியை செய்து குடியுங்கள். முக்கியமாக இந்த கஞ்சி எலும்புகளை வலுப்படுத்துவதோடு, பெண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது கர்ப்பப்பையை வலுவாக்க பெரிதும் உதவும்.

இந்த கஞ்சியை வாரத்திற்கு 3 முறை குடித்து வருவது நல்லது. இப்படிப்பட்ட கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடலாம். அதுவும் இந்த கஞ்சிக்கு தேங்காய் துவையலை சைடு டிஷ்ஷாக செய்தால், சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும்.

Karuppu Ulunthu Kanji How To Make a Healthy and Tasty Karuppu Ulunthu Kanji

உங்களுக்கு இந்த கருப்பு உளுந்து கஞ்சி மற்றும் தேங்காய் துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு உளுந்து கஞ்சி மற்றும் தேங்காய் துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உடைத்த கருப்பு உளுத்தம் பருப்பு - 1 கப்
* புழுங்கல் அரிசி - 3/4 கப்
* தண்ணீர் - 4 கப் + தேவையான அளவு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 7 பல்
* உப்பு - சுவைக்கேற்ப

தேங்காய் பாலுக்கு...

* தேங்காய் - 1 பெரிய மூடி (துருவியது)
* தண்ணீர் - தேவையான அளவு

துவையலுக்கு...

* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
* வரமிளகாய் - 4
* காஷ்மீரி வமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் குக்கரில் 1 கப் உடைத்த கருப்பு உளுத்தம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 3/4 கப் புழுங்கல் அரிசியை சேர்த்து, நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 4 கப் நீரை ஊற்றி, அத்துடன் சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மசித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து தேங்காய் பால் எடுக்க மிக்சர் ஜாரில் 1 பெரிய மூடி துருவிய தேங்காயை எடுத்து, அத்துடன் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, அதை வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு 2 கப் தேங்காய் பாலை எடுத்துக் கொண்டால், சுவை நன்றாக இருக்கும்.
* பின்பு அந்த தேங்காய் பாலை குக்கரில் உள்ள கஞ்சியுடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். தேவைப்பட்டால் சுடுநீரையும் கொஞ்சம் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
* பின் மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, கஞ்சியை ஒரு கொதிவிட்டு இறக்கினால், கருப்பு உளுந்து கஞ்சி தயார்.
* அடுத்து துவையல் செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, புளி, வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய், கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து லேசாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு அரைத்து இறக்கினால், தேங்காய் துவையல் தயார். இந்த கருப்பு உளுந்து கஞ்சிக்கு சிறந்த சைடு டிஷ் என்றால், அது இந்த தேங்காய் துவையல் தான்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion