தெருவே மணக்கும் காரைக்குடி சிக்கன் ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... அட்டகாசமா இருக்கும்...!

Posted By:

Karaikudi Chicken Gravy Recipe in Tamil: நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை வருவதே நான் வெஜ் உணவை விரும்பி சாப்பிடத்தான். பெரும்பாலான வீடுகளில் சண்டே காலையிலேயே சிக்கன் அல்லது மட்டன்தான். இதில் சுவையிலும், விலையிலும் மட்டனை விட சிக்கனே பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. அதேசமயம் சமைப்பதிலும் மட்டனை விட சிக்கன் மிகவும் எளிமையானது.

செட்டிநாடு உணவுகள் என்றாலே சுவையானவைதான், அதிலும் செட்டிநாட்டு அசைவ உணவுகள் என்றால் எப்பவுமே ஸ்பெஷல்தான். அதனால்தான் அனைத்து ஊர்களிலும் செட்டிநாடு உணவகங்கள் திறக்கப்படுகிறது. செட்டிநாடு உணவகங்களில் சிக்கன் பல்வேறு விதங்களில் சுவையாக சமைக்கப்படுகிறது.

Karaikudi Chicken Gravy Recipe How to Prepare Karaikudi Chicken Gravy

அதில் மிகவும் குறிப்பிடத்தக்க டிஷ்தான் காரைக்குடி சிக்கன். இந்த சிக்கன் செய்வதற்கு எளிதானது மற்றும் மிகவும் சுவையானதும் கூட. இந்த சிக்கன் இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சாப்பிடவும் மிகவும் அருமையாக இருக்கும். இந்த பதிவில் சூப்பரான காரைக்குடி சிக்கனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:

- சிக்கன் - 1/2 கிலோ
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 2
- கறிவேப்பிலை - 2 கொத்து
- சோம்பு - 1/4 ஸ்பூன்(தாளிக்க)
- சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- மிளகுத்தூள் - 2 ஸ்பூன
- இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு

அரைக்க:

- மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- வர மிளகாய் - 6
- மல்லித்தூள் - 4 ஸ்பூன்
- பட்டை - ஒரு துண்டு
- கிராம்பு - 5
- ஏலக்காய் - 4
- மராத்தி மொக்கு - சிறிது
- ஜாதிக்காய் - கால் பாகம்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்

செய்முறை:

- சிக்கனை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிரட்டி வைக்கவும்.

- கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய் துருவல் மற்றும் கறிவேப்பிலை தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும்.

- அதன் பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

- கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கி எடுத்து ஆறவிடவும்.

- இந்த கலவை ஆறியதும் முதலில் பொடியாக அரைத்து பின்பு தேவைக்கேற்ப நீர் விட்டு நைசாக அரைத்துக் எடுத்துக் கொள்ளவும்.

- கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, சிறிது கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

-பின்னர் இரண்டாக கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

- அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

- தக்காளி குழைய வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி எண்ணெய் பிரிய வதக்கவும்.......

- மசாலா பச்சை வாசனை போனதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும்.

- நீர் சேர்க்கத் தேவையில்லை. சிக்கனிலிருந்து வெளிவரும் தண்ணீரிலேயே சிக்கன் வேகும் போது கூடுதல் சுவையாக இருக்கும்.

- சிக்கன் நன்றாக வெந்ததும் அரைத்த மசாலா கலவையை ஊற்றி கலந்து கொதிக்கவிடவும்.

- பச்சை வாசம் போனதும் கொதித்து எண்ணெய் பிரியும் போது சிறிது கறிவேப்பிலை மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி பரிமாறவும்.

- இதை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, March 8, 2025, 22:09 [IST]
Desktop Bottom Promotion