இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் கொழுப்பும் குறையும்.. சுகரும் கண்ட்ரோலா இருக்கும்...

Posted By:

Kaatuyanam Arisi Kanji Recipe In Tamil: கஞ்சி உடலுக்கு மிகவும் நல்லது. இதுவரை நீங்கள் எத்தனையோ கஞ்சியை செய்து குடித்திருப்பீர்கள். அதுவும் சிறு தானியங்களை எடுத்துக் கொண்டால், திணை, வரகு, குதிரைவாலி போன்றவற்றைக் கொண்டும், கம்பு, சோளம், ராகி போன்றவற்றைக் கொண்டும், கைக்குத்தல் அரிசி, கவுனி அரிசி ஆகியவற்றைக் கொண்டும் கஞ்சி செய்து குடித்திருப்பீர்கள்.

ஆனால் காட்டுயானம் அரிசியை கொண்டு கஞ்சி செய்து குடித்துள்ளீர்களா? காட்டுயானம் அரிசி என்பது கருப்பு கவுனி அரிசியைப் போன்றே காணப்படும். ஆனால் இது சற்று சிவப்பு கலந்த நிறத்தில் காணப்படும். இந்த காட்டுயானம் அரிசியில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஜிங்க், மக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6 போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளன.

Kaatuyanam Arisi Kanji How To Make a Kaatuyanam Rice Porridge

இப்படிப்பட்ட காட்டுயானம் அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது மற்றும் இது உடல் கொழுப்பைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தி குடலியக்கத்தை சீராக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. டயட்டில் உள்ளோர் இந்த அரிசியைக் கொண்டு தினமும் கஞ்சி செய்து குடித்து வந்தால், உடல் எடையில் ஒரு சிறப்பான மாற்றத்தைக் காணலாம்.

உங்களுக்கு காட்டுயானம் அரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காட்டுயானம் அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* காட்டுயானம் அரிசி - 1 டம்ளர்
* நெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 8 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 7 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் காட்டுயானம் அரிசியை 1 டம்ளர் சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வறுத்த அரிசியை மிக்சர் ஜாரில் போட்டு, கொரகொரவென்று பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகு மற்றும் சீரகத்தை இடி உரலில் போட்டு தட்டி சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 டம்ளர் காட்டுயானம் அரிசிக்கு, 7 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொத்தமல்லியைத் தூவி, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால், சுடுநீரை சிறிது ஊற்றி கலந்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கலந்தால், சுவையான காட்டுயானம் அரிசி கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, September 8, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion