ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்சக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்

Posted By:

Iyengar Style Avarakkai Poricha Kulambu Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? அப்படியென்றால் ஐயங்கார் ஸ்டைலில் ஒருமுறை அவரைக்காய் பொரிச்சக் குழம்பை முயற்சி செய்து பாருங்கள்.

Iyengar Style Avarakkai Poricha Kulambu Recipe How to Make at Home in Tamil

பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் குழம்பு ரெசிபி என்றாலே அதற்கு தனித்துவமான ருசியும், மணமும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த அவரைக்காய் பொரிச்சக் குழம்பும் அதற்கு விதிவிலக்கல்ல. சாம்பார், ரசம் என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த குழம்பு புதுவிதமான சுவையைக் கொடுக்கும். இந்த ஸ்டைல் பொரிச்சக் குழம்பு செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்.

உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் பொரிச்சக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ ஐயங்கார் ஸ்டைல் பொரிச்சக் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 கப் நறுக்கிய அவரைக்காய்
- 1/4 கப் பாசிப்பருப்பு
- ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
- ¼ டீஸ்பூன் பெருங்காயத் தூள்
- ஒரு கொத்து கறிவேப்பிலை

வறுத்து அரைக்க:

- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 வர மிளகாய்
- 10மிளகு
- 1 ஸ்பூன் சீரகம்
- ¼ கப் தேங்காய்

செய்முறை:

- அவரைக்காயை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

- ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, ஒரு கப் நறுக்கிய அவரைக்காய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- இதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.

- குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

- ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் மிளகு ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும்.

- மிளகாய் நிறம் மாறியதும் சீரகத்தைச் சேர்த்து வதக்கவும்.

- பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் அடுப்பை அணைக்கவும்.

- இந்த கலவை ஆறியதும் ஒரு மிக்சி ஜாருக்கு மாற்றி அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.

- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.

- கடுகு வெடித்ததும், வேகவைத்த பருப்பு-அவரைக்காய் கலவை, அரைத்த விழுது மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- நன்றாகக் கிளறி விட்டு, தேவையான பதத்திற்கு ஏற்ப தண்ணீர் சேர்க்கவும்.

-இதை 2 நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.

- அவ்வளவுதான் சுவையான அவரைக்காய் பொரிச்ச குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, July 27, 2026, 13:37 [IST]
Desktop Bottom Promotion