விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க..

Posted By:

Ganesh Chaturthi Special Ellu Poorna Kozhukattai Recipe In Tamil: விநாயகர் சதுர்த்தி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது கொழுக்கட்டை தான். இந்த கொழுக்கட்டையில் பிடிக்கொழுக்கட்டை, பூர்ண கொழுக்கட்டை பலவிதங்கள் உள்ளன. அதில் பூர்ண கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டால், அதிலும் உள்ளே வைக்கும் பூர்ணத்தை வைத்து பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று பதான் எள்ளு பூர்ணக் கொழுக்கட்டை.

Ganesh Chaturthi Special Recipe How To Make Ellu Poorna Kozhukattai Recipe

பொதுவாக பூர்ண கொழுக்கட்டை செய்யும் பலர் சந்திக்கும் ஒரு பிரச்சனை, கொழுக்கட்டையை வேக வைக்கும் போது கொழுக்கட்டை வெடிப்பது. நீங்களும் இந்த பிரச்சனையை தான் சந்திப்பீர்களா? அப்படியானால் எள்ளு பூர்ண கொழுக்கட்டையை இந்த பக்குவத்தில் செய்யுங்கள். இப்படி செய்யும் போது 10 நிமிடத்தில் 50 கொழுக்கட்டை கூட அசால்ட்டாக செய்வீர்கள். முக்கியமாக இந்த கொழுக்கட்டை மணமும் சுவையும் நிறைந்ததாக இருக்கும்.

உங்களுக்கு இந்த எள்ளு பூர்ண கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எள்ளு பூர்ண கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கருப்பு எள்ளு - 3 டேபிள் ஸ்பூன்
* பொடித்த வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 கப்
* உப்பு - 2 சிட்டிகை

மேல் மாவிற்கு...

* அரிசி மாவு - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 1/2 டீஸ்பூன்
* சுடுநீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கருப்பு எள்ளு விதைகளை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் அதை போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை எடுத்துக் கொண்டு, அதில் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கரைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், துருவிய தேங்காயை சேர்த்து, ஈரப்பதம் போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி, 2 சிட்டிகை உப்பு மற்றும் பொடித்த எள்ளு விதைகளை சேர்த்து, நன்கு கிளறி இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் 1 கப் அரிசி மாவை எடுத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து, 1/2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கரண்டியால் நன்கு கிளறி விட வேண்டும். மாவின் பதம் என்றால் மாவு இறுக்கமாக இல்லாமல், சற்று தளர்வாக இருக்க வேண்டும்.
* பின் சிறிது நேரம் மாவை குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து சிறு சிறு வாழை இலையை எடுத்து, அதில் சிறிது மாவை வைத்து தட்டையாக பரப்பி, அதனுள் பூர்ணத்தை சிறிது வைத்து அப்படியே வாழை இலையை மடித்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நீரை ஊற்றி நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதனுள் இட்லி தட்டை வைத்து, வாழை இலைகளை வைத்து மூடி வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், எள்ளு பூர்ண கொழுக்கட்டை தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, September 10, 2026, 15:30 [IST]
Desktop Bottom Promotion