இட்லி பொடியை ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. வீட்டுல சட்னி, சாம்பார் கேட்கவே மாட்டாங்க..

Posted By:

Idli Podi Recipe In Tamil: உங்கள் வீட்டில் எப்போதுமே இட்லி பொடி இருக்குமா? என்ன தான் இட்லி பொடி இருந்தாலும், உங்கள் வீட்டில் உள்ளோர் சட்னி, சாம்பார் கேட்பார்களா? சொல்லப்போனால் இட்லி பொடியை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் இட்லி பொடியை ஒருமுறை இந்த பக்குவத்தில் செய்யுங்கள்.

அதுவும் இட்லி பொடிக்கு சாதாரண வெள்ளை உளுந்தை பயன்படுத்தாமல், கருப்பு உளுந்தை பயன்படுத்தும் போது, அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். முக்கியமாக இப்படி இட்லி பொடியை செய்யும் போது, சுவை பிரமாதமாக இருப்பதோடு, சத்தானதும் கூட. இப்படி இட்லி பொடியை செய்தால், இட்லி பொடி பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த மாதிரி இட்லி பொடியை செய்தால், ஒரு மாதம் வரை வைத்து சாப்பிடலாம்.

Idli Podi Recipe How To Make a Karuppu Ulunthu Idli Podi Recipe

உங்களுக்கு இட்லி பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கருப்பு உளுத்தம் பருப்பு - 1 கப்
* கடலைப் பருப்பு - 1 கப்
* வெள்ளை எள்ளு விதைகள் - 1/2 கப்
* எண்ணெய் - 1/2 ஸ்பூன் + 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 25
* காஷ்மீரி வரமிளகாய் - 7
* பூண்டு - 8 பல்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியில் கடலைப் பருப்பை சேர்த்து, அதையும் லேசாக நிறம் மாற வறுத்து தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் மீண்டும் அதே வாணலியில் வெள்ளை எள்ளு விதைகளை சேர்த்து அதையும் வறுத்து தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து அதே வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வறுத்து, எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், நிறத்திற்காக காஷ்மீரி வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்து குளிர வைத்த பொருட்கள் அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பூண்டு பற்களை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பொடியானது நன்கு குளிர்ந்த பின், காற்றுப் புகாத டப்பாவில் போட்டு பயன்படுத்தினால், சுவையான கருப்பு உளுந்து இட்லி பொடி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, November 24, 2025, 19:20 [IST]
Desktop Bottom Promotion