வீடே மணக்கும் ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம் ரெசிபி... இனிமே ஹோட்டலுக்கே போக வேணாம்...!

Posted By:

Hotel Style Sambar Sadham Recipe: சாம்பார் சாதம் என்றால் கேட்பதற்கு மிகவும் சாதாரண உணவு போல தோன்றலாம். உண்மையில் சாம்பார் வைத்து அதில் சாதத்தை போட்டு கிளறினால் வருவது சாம்பார் சாதமல்ல. அது மிகவும் சுவையான அதேசமயம் மிகவும் கவனமாக செய்ய வேண்டிய உணவாகும்.

பெரும்பாலான உயர்தர சைவ உணவகங்களில் ஒரு சுவையான சாம்பார் சாதம் பரிமாறுவார்கள். நம்மில் பெரும்பாலானவர்கள் இதனை சாப்பிட்டு மகிழ்ந்திருப்போம். ஆனால் அதனை வீட்டில் முயற்சிக்கும் போது நிச்சயம் அந்த சுவை கிடைக்காது. அதற்கு பல காரணம் இருக்கலாம். இந்த பதிவில் ஹோட்டல் சுவையிலேயே எப்படி சுவையான சாம்பார் சாதம் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Hotel Style Sambar Sadham Recipe How To Prepare Tasty Sambar Sadham

தேவையா பொருட்கள்:

- 1 கப் அரிசி
- 1/2 கப் துவரம் பருப்பு
- எலுமிச்சை அளவு புளி
- 1/2 தேக்கரண்டி உப்பு & மஞ்சள்
- 1 டீஸ்பூன் சாம்பார் பொடி நீங்கள் பயன்படுத்தும் பொடியின் காரத்தைப் பொறுத்து அளவை அதிகரிக்கவும்
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 1/4 கப் வர கொத்தமல்லி

தாளிக்க:

- கறிவேப்பிலை சிறிது
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1/2 தேக்கரண்டி சீரகம்
- 2 காய்ந்த மிளகாய்
- 1 ஸ்பூன் நெய்

தேவையான காய்கறிகள்:

- 20 சிறிய வெங்காயம்
- 2 கேரட்
- 10 பீன்ஸ்
- 2 முருங்கைக்காய்
- 1 உருளைக்கிழங்கு
- கொத்தமல்லி இலை சிறிது

செய்முறை:

- பிரஷர் குக்கரில் அரிசி மற்றும் துவரம்பருப்பு சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- தேங்காய், புளி, கொத்தமல்லி விதைகள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைக்கவும்.
- ஒரு தடிமனான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை சேர்த்து சூடாக்கவும், முதலில் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதன்பின் முருங்கைக்காய், கேரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
- 1/4 கப் தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.
- காய்கறிகள் பாதி பதம் வேகும் வரை காத்திருக்கவும். பின்னர் புளிச்சாறு, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து மேலும் 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை காத்திருக்கவும்.
- இந்த நிலையில் பாத்திரத்தில் அரிசி மற்றும் பருப்பு கலவையை சேர்க்கவும். கடாயின் அடிப்பகுதியில் அரிசி சிக்காமல் இருக்க, தொடர்ந்து கிளறவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு வேகும்வரை கிளறவும்.
- அதன்பின் ஓர் சிறிய பாத்திரத்தில் நெய் சேர்த்து கறிவேப்பிலை, கடுகு, சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து அதை சாதத்தின் மீது ஊற்றி நன்கு கிளறி விடவும்.
- இறுதியாக மேலே கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்தால் சுவையான மணமணக்கும் ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம் ரெடி.

முக்கிய குறிப்புகள்:

- சாம்பார் சாதத்திற்கு, சாதம் முழுவதுமாக மசிந்து இருக்க வேண்டும், அரிசி அரிசியாக இருக்கக்கூடாது.

- சாம்பார் சாதம் சமைத்தப் பிறகு கெட்டியாகும் தன்மை கொண்டது. இந்த சிக்கலை தவிர்க்க, அரிசி மற்றும் பருப்பு கலவையை குக்கரில் சமைக்கும் போது தேவைக்கு அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டும்.

- பொதுவாக ஒரு கப் சாதம் சமைப்பதற்கு 2 கப் தண்ணீர் சேர்த்தால், இந்த சாம்பார் சாதம் செய்ய 1 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

- சாம்பாரின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். சாம்பாரில் சாதம் மற்றும் பருப்புக் கலவையைச் சேர்க்கவும் அளவிற்கு சாம்பாரின் அளவு இருக்க வேண்டும்.

- ஒருவேளை உங்கள் சாம்பார் சாதம் பரிமாறும் முன் கெட்டியாக இருந்தால், 1/2 கப் நீரை கொதிக்க வைத்து, சாம்பார் சாதத்தில் சேர்க்கவும். அதன்பின் நெய்யில் சாம்பார் தூளை போட்டு தாளித்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion