மாலை நேர ஸ்நாக்ஸ்... பச்சை பயறு வடை

Posted By:

பொதுத்தேர்வு விடுமுறை விட்டாச்சு... குழந்தைகள் நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பதால் எந்நேரமும் சாப்பிட ஏதாவது கேட்பார்கள். அதுவும் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, நிச்சயம் குழந்தைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்பார்கள்.

உங்கள் குழந்தைகள் வடைகளை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் மாவை வேளையில் அவர்களுக்கு வடை செய்து கொடுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் பச்சை பயறு இருந்தால், அதை கொண்டு பச்சை பயறு வடை செய்து கொடுங்கள்.

Green Gram Vadai Recipe In Tamil

பச்சை பயறில் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே இந்த பச்சை பயறை குழந்தைகளின் உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. பச்சை பயறு வடை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு பச்சை பயறு வடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சை பயறு - 1 கப்
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 3-4 பல்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* சூடான எண்ணெய் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பச்சை பயறை கழுவி, சுடுநீரில் 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதே சமயம், வாணலியில் மல்லி, சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றைப் போட்டு 2 நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைத்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஊற வைத்துள்ள பயறில் 3-4 டேபிள் ஸ்பூனை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் பச்சை பயறு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை எடுத்து கொரகொரவென்று அரைத்து, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தனியாக எடுத்து வைத்துள்ள பச்சை பயறு, அரைத்த பொடி, சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மாங்காய் தூள், பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின்னர் பிசைந்து வைத்துள்ள கலவையுடன் பேக்கிங் சோடா மற்றும் சிறிது சூடான எண்ணெயை ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் கையில் எண்ணெயைத் தடவி, பிசைந்து வைத்துள்ள கலவையில் சிறிது எடுத்து, அதை உருட்டி தட்டையாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து மாவையும் வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான பச்சை பயறு வடை தயார்.

குறிப்பு:

* பயறை அரைக்கும் போது, அத்துடன் நீரை சேர்க்காதீர்கள்.
* வடை கலவையுடன் கடலை மாவு சேர்த்தால், வடைக்கான பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும். எனவே சிறிது கடலை மாவை சேர்த்துக் கொள்ளலாம்.
* வடைகளை பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரியுங்கள். இல்லாவிட்டால் கருகிவிடும்.
* எண்ணெய் நன்கு சூடான பின்னரே தட்டிய வடைகளை எண்ணெயில் போட வேண்டும்.

Image Courtesy: nehascookbook

[ of 5 - Users]
Story first published: Saturday, April 15, 2023, 15:20 [IST]
Desktop Bottom Promotion