பண்டிகை நாட்களில் எப்பவும் ஒரே மாதிரி பாயாசம் செய்யாம.. ஒருடைம் இந்த கோதுமை பாயாசத்தை செஞ்சு பாருங்க..

Posted By:

Wheat Payasam Recipe In Tamil: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நாட்களில் வீட்டில் வடை பாயாசத்துடன் சமைத்து சாப்பிடுவோம். பொதுவாக பண்டிகை நாட்களில் பெரும்பாலான வீடுகளில் பாயாசம் செய்வது வழக்கமாக இருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படி தானா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி தான் பாயாசத்தை செய்வீர்களா?

அப்படியானால் வருகிற ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு வீட்டில் பாயாசம் செய்யும் போது, வழக்கமாக செய்யும் பாயாசத்தை செய்யாமல், கோதுமை பாயாசத்தை செய்யுங்கள். இந்த பாயாசம் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

Gothumai Payasam How To Make a Wheat Payasam Recipe

உங்களுக்கு கோதுமை பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உடைத்த கோதுமை - 1/2 கப்
* தண்ணீர் - 2 கப்
* வெல்லம் - 3/4 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* நெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10 முந்திரி
* தேங்காய் - சிறிது
* ஏலக்காய் தூள் - சிறிது

தேங்காய் பால் எடுப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப் + 3/4 கப் + 1 கப்

செய்முறை:

* முதலில் உடைத்த கோதுமையை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியில் கழுவிய உடைத்த கோதுமையை சேர்த்து, அத்துடன் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, மூடி வைத்து, கோதுமையை வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் வெல்லத்தை சேர்த்து, நீரை ஊற்றி, வெல்லத்தை கரைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு 3 வகையான தேங்காய் பாலை எடுப்பதற்கு, முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை எடுத்து, அதில் 1/2 கப் நீரை ஊற்றி அரைத்து, கெட்டியாக முதல் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.
* அதன் பின் அதே தேங்காயை மிக்சர் ஜாரில் போட்டு, அதில் 3/4 கப் நீரை ஊற்றி, இரண்டாம் தேங்காய் பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* கடைசியாக அதே தேங்காயில் 1 கப் நீரை ஊற்றி அரைத்து, அதை வடிகட்டி மூன்றாம் தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் கோதுமையுடன், வெல்ல நீரை வடிகட்டி சேர்த்து கிளறி, கோதுமை ஓரளவு கெட்டியாகத் தொடங்கும் போது, மூன்றாம் தேங்காய் பாலை ஊற்றி, கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றி, ஓரளவு சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக முதல் தேங்காய் பாலை ஊற்றி, 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து வறுத்து, பாயாசத்துடன் சேர்த்து, அத்துடன் ஏலக்காய் தூளையும் சேர்த்து கிளறினால், சுவையான கோதுமை பாயாசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, October 10, 2024, 18:00 [IST]
Desktop Bottom Promotion