வெறும் 4 பொருள் இருந்தா போதும்.. நாவூறும்.. ருசியான மோத்திசூர் லட்டு செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..

Posted By:

Ganesh Chaturthi Special Motichoor Laddu Recipe In Tamil: விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரப்போகிறது. அனைவரும் விநாயகருக்கு படைத்து வழிபட, அவருக்கு பிடித்த பலகாரங்களை எப்படி செய்வதென்று தயாராகிக் கொண்டிருப்போம். பொதுவாக விநாயகருக்கு கொழுக்கட்டை, லட்டு போன்றவை ரொம்ப பிடிக்கும்.

இதில் கொழுக்கட்டை அனைவருக்கும் செய்ய தெரியும். இதனால் அதை வீட்டிலேயே செய்வோம். ஆனால் லட்டுவை கடையில் வாங்குவோம். இப்படி கடைகளில் நிறைய பணம் செலவழித்து பிள்ளையாருக்கு லட்டுவை வாங்கி வைத்து படைத்து வழிபடுவதற்கு பதிலாக, அந்த லட்டுவை வீட்டிலேயே செய்தால், பணமும் மிச்சம், ஆரோக்கியமானதும் கூட.

Ganesh Chaturthi Special Recipe How to Make Motichoor Laddu

அதுவும் பிள்ளையாருக்கு பிடித்த மோத்திசூர் லட்டுவை செய்தால் சூப்பராக இருக்கும் அல்லவா? முக்கியமாக இந்த லட்டுவை வெறும் 4-5 பொருட்களைக் கொண்டே செய்யலாம் என்பது தெரியுமா? பிரபல இந்திய செஃப்பான தீனா அவர்கள் தனது சமூகவலைத்தள பக்கத்தில் மோத்திசூர் லட்டுவை எப்படி செய்வதென்று தெளிவாக செய்து காட்டியுள்ளார்.

நீங்கள் விநாயகர் சதுர்த்திக்கு மோத்திசூர் லட்டுவை செய்ய நினைக்கிறீர்களா? கீழே பிரபல இந்திய செஃப்பான தீனா அவர்கள் செய்து காட்டிய மோத்திசூர் லட்டு ரெசிபி விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பூந்திக்கு..

* கடலை மாவு - 250 கிராம்
* தண்ணீர் - 400 மிலி
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

சர்க்கரை தண்ணிக்கு...

* சர்க்கரை - 1/2 கிலோ
* தண்ணீர் - 250 மிலி
* ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற ஃபுட் கலர் - 1 டீஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, அதில் 400 மிலி நீரில் இருந்து கொஞ்சமாக நீரை ஊற்றி, கட்டிகளின்றி நன்கு அடித்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் மீதமுள்ள நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பூந்திக்கு நீரின் அளவு மிகவும் முக்கியம்.
* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வாணலிக்கு மேல் 1 ஆம் எண் ஜார்னியை (அகலமான கண்ணு கரண்டி) எடுத்து மேலே நீட்டி, அதில் கலந்து வைத்துள்ள கடலை மாவை கொஞ்சம் ஊற்றி, பூந்திகளாக செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக இந்த பூந்தியை செய்யும் போது, அருகில் வாணலி இருக்கும் உயரத்தை விட சற்று உயரமாக இருக்கும் ஒரு பெட்டி அல்லது டின்னை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் பூந்தியை ஜார்னியில் இருந்து தட்ட வசதியாக இருக்கும்.
* பிறகு பூந்திகளை நன்கு கிளறி விட்டு, பொரித்து ஒரு தட்டில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான வாணலியில் 1/2 கிலோ சர்க்கரை மற்றும் 250 மிலி நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, சர்க்கரையை கரைய விட வேண்டும். சர்க்கரை கரைந்து, நீர் 2 கொதி வந்ததும், அதில் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற ஃபுட் கலரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் பொரித்து வைத்துள்ள பூந்திகளை போட்டு நன்கு பூந்தியில் சர்க்கரை தண்ணீர் மற்றும நிறம் ஏறும் வரை கிளறி விட்டு, மேல் பகுதியை சமமாக தேய்த்து விட்டு, சர்க்கரை தண்ணீர் மேலே வரும் வரை 2 நிமிடம் அப்படியே விட வேண்டும்.
* பின் மீண்டும் நன்கு கிளறி விட்டு, அடுப்பை அணைத்துவிட்டு, 1/2 மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து பூந்தியை எடுத்தால், சர்க்கரை நீர் பூந்தியில் இறங்கி இருப்பதைக் காணலாம். சரியான பதத்தில் உள்ளதா என்பதை அறிய, சிறிது பூந்தியை எடுத்து கைகளால் உருட்டி பிடித்து பாருங்கள். நன்கு உருண்டை பிடிக்க வந்தால், சரியாக உள்ளது என்று அர்த்தம்.
* இறுதியாக அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி, பூந்தியை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டினால், சுவையான மோத்திசூர் லட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, August 25, 2025, 13:52 [IST]
Desktop Bottom Promotion