தள்ளுவண்டி தக்காளி குருமா ரெசிபி... செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...!

Posted By:

Tomato Kurma Recipe in Tamil: என்ன தான் வீட்டில் விதவிதமாய் செய்தாலும், மாலை நேரத்தில் ரோட்டில் நடந்து போகும் போது வரும் பாருங்க ரோட்டு கடை குழம்போட வாசனை நம்மை எப்படியாவது ஒரு நாள் அந்த கடையில் சாப்பிட செய்து விடும். பூக்கடைக்கு விளம்பரம் தேவையான்னு சொல்வோம், அதே மாதிரி தான் ரோட்டுக்கடை குழம்பின் வாசனையும். சரி வாங்க ரோட்டுக்கடை தக்காளி குருமா எப்படி செய்யறதுன்னு இங்க பார்க்கலாம் வாங்க.

Easy Dinner Idea How to Prepare Tomato Kurma Recipe

தேவையான பொருட்கள்:

- சோம்பு - ½ டீ ஸ்பூன்
- கல்பாசி - 1 டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - ஒரு கொத்து
- பெரிய வெங்காயம் - 2
- இஞ்சி - ஒரு துண்டு (1 இன்ச் அளவு)
- பூண்டு - 8 அல்லது 10 பல்
- தக்காளி - 3
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- மல்லித்தூள் - 2 டீ ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு

அரைக்க:

தேங்காய் - 1 மூடி
கசகசா - 1 டீ ஸ்பூன்
முந்திரி - 7 அல்லது 8
சோம்பு - 1 டீ ஸ்பூன்
பட்டை - 2 (பெரிய துண்டு)
கிராம்பு - 2

அல்லது

பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்(கசகசா மற்றும் முந்திரிக்கு மாற்றாக)

செய்முறை:

- பூண்டு மற்றும் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.

- வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

- இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் பூண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

- பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

- தேங்காயை உங்கள் விருப்பப்படி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.

- தேங்காய், சோம்பு, முந்திரி, கசகசா, பட்டை மற்றும் கிராம்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சிறிதளவு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.

- எண்ணெய் காய்ந்ததும் சோம்பு மற்றும் கல்பாசி சேர்த்து தாளிக்கவும்.

- பின் அதில் கருவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

- பின் அதில் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

- அதனுடன் தக்காளி மற்றும் கீறி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக குழைந்து வரும் வரை வேக விடவும்.

- அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ளவும்.

- அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

- பின் அதில் அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து நன்கு கிளறவும்.

- அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

- கடைசியாக கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அணைத்து இறக்கினால் சுவையான ரோட்டுக்கடை தக்காளி குருமா ரெடி!

[ of 5 - Users]
Story first published: Saturday, June 7, 2025, 21:47 [IST]
Desktop Bottom Promotion