தீபாவளி ஸ்பெஷல் பாதுஷா.. எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...

Posted By:

Diwali Special Badusa Recipe In Tamil: தீபாவளி பண்டிகைக்கு எப்போதும் வீட்டில் ஸ்வீட், காரம் என்று செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பாதுஷா பிடிக்குமா? ஆனால் இதுவரை அதை கடையில் தான் வாங்கியுள்ளீர்களா? அப்படியானால் இந்த தீபாவளிக்கு அந்த பாதுஷாவை வீட்டிலேயே செய்யுங்கள். பாதுஷா செய்வதற்கு ஒருசில டிப்ஸ்களை நினைவில் கொண்டு செய்தாலே போதும். கடையில் விற்கப்படும் பாதுஷாவை விட சூப்பராக செய்யலாம்.

உங்களுக்கு பாதுஷாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாதுஷா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Diwali Special Recipe How To Make Badusa Recipe

தேவையான பொருட்கள்:

* மைதா - 2 கப்
* பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* சர்க்கரை பொடி - 3/4 டீஸ்பூன்
* பிரஷ்ஷான தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1/4 கப் + 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

சர்க்கரை பாகுவிற்கு...

* சர்க்கரை - 1 3/4 கப்
* தண்ணீர் - 3/4 கப்
* ஏலக்காய் - 3
* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பேக்கிங் பவுடர், உப்பு, பொடித்த சர்க்கரை, பிரஷ்ஷான தயிர் மற்றும் நெய்யை சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும். அந்த மாவை நன்கு கிளறி ஒரு கைப்பிடி மாவைப் பிடிக்கும் போது, மாவு அப்படியே இறுக்கமாக இருந்தால், மாவு சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம்.
* பின் அதில் சிறிது நீரைத் தெளித்து, மென்மையாக பிசைய வேண்டும். அழுத்தி பிசையக்கூடாது. அழுத்தி பிசைந்தால், பாதுஷாவில் லேயர் வராமல், பாதுஷா இறுக்கமாக இருக்கும். எனவே மென்மையாக மாவை பிசைய வேண்டும். பின் மாவை பிரித்து பிரித்து பிசைய வேண்டும். அப்படி பிசைந்த பின் மூடி வைத்து 1 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு, அத்துடன் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து, சர்க்கரையை கரைய வைக்க வேண்டும். சர்க்கரை கரைந்த பின், தீயை அதிகரித்து, கம்பி பதத்திற்கு வரும் வரை பாகுவை தயார் செய்ய வேண்டும்.
* சர்க்கரை பாகு கம்பி பதத்திற்கு வந்ததும், அதில் ஏலக்காயைத் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, சர்க்கரை பாகுவின் பதம் மாறாமல் இருக்க சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* மாவு நன்கு ஊறியதும், சிறு சிறு உருண்டைகளாக எடுத்து அழுத்தி உருட்டாமல் மென்மையாக உருட்டி, பெருவிரலால் நடுவே அழுத்தி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, லேசாக சூடானதுமே செய்து வைத்துள்ள பாதுஷாவை சேர்த்து, குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். அப்படி சேர்க்கும் போது, பாதுஷா ஆரம்பத்தில் அடியில் தங்கியிருக்கும். பின் அது தானாகவே மேலெழுந்து வரும். அதன் பின் கரண்டியால் திருப்பி திருப்பிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக செய்து வைத்துள்ள பாதுஷாக்களை வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் சர்க்கரை பாகுவுடன் சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் அதை ஒரு தட்டில் எடுத்து வைத்தால், சுவையான பாதுஷா தயார்.

குறிப்பு: பாதுஷாவை எண்ணெயில் பொரிக்கும் போது எண்ணெய் அதிக சூட்டில் இல்லாமல் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அதை சூட்டில் இருந்தால், உள்ளே உள்ள மாவு வேகாமல் இருக்கும். எனவே இதை நினைவில் கொள்ளுங்கள்.

[ of 5 - Users]
Story first published: Monday, October 21, 2024, 20:25 [IST]
Desktop Bottom Promotion