சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும்

Posted By:

Chicken Sholay Kebab Recipe in Tamil: சண்டே வந்தாலே அது அசைவ உணவை ரசித்து சாப்பிடுவதற்கான நாள் என்றாகி விட்டது. இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா? சிக்கன் 65 என்றால் அனைவருக்குமே பிடிக்கும், ஆனால் வழக்கமான சிக்கன் 65 செய்யாமல் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான சிக்கன் சைடிஷ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஷோலே கபாபை முயற்சி செய்து பாருங்கள்.

Chicken Sholay Kebab Recipe How to Make at Home in Tamil

இந்த ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஷோலே கபாப் சாதம், பிரியாணி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த கபாப் பெங்களூர், ஆந்திரா ரெஸ்டாரண்ட்களில் மிகவும் பிரபலமானதாகும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஷோலே கபாபை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஷோலே கபாப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் விழுது அரைக்க:

- அரை கிலோ எலும்பில்லாத சிக்கன்
- 4 கொத்து கறிவேப்பிலை
- 2 அங்குல இஞ்சி
-10 பல் பூண்டு
- 3 பச்சை மிளகாய்

ஷோலே கபாப் மாவு செய்ய:

- 2 ஸ்பூன் அரிசி மாவு
- 3 ஸ்பூன் மைதா மாவு
-1 ஸ்பூன் கடலை மாவு
- 2 ஸ்பூன் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் சாம்பார் தூள்
- 1 ஸ்பூன் சீரகத் தூள்
- 1 ஸ்பூன் மல்லித் தூள்
- பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்

செய்முறை:

- முதலில் சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

- ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து, அதனுடன் சுமார் 2 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

- ஒரு அகலமான பாத்திரத்தில், கடலை மாவு மற்றும் அரிசி மாவை மைதா மாவுடன் சேர்த்து கலக்கவும்.

- இந்த மாவுக் கலவையுடன் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, சாம்பார் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் மற்றும் இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் விழுது ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- இந்த கபாப் செய்ய மாவு கெட்டியாக இருக்க வேண்டும். எனவே கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலக்கவும்.

- ஒரு ஆழமான பாத்திரத்தில் அதிகமான தீயில் எண்ணெயைச் சூடாக்கவும். எண்ணெய் நன்றாகச் சூடானதும், அடுப்பை மிதமாக மாற்றவும்.

- பின்னர் சுத்தம் செய்த சிக்கனை மாவுக்கலவையில் நனைத்து, நனறாக கலந்து சூடான எண்ணெயில் மெதுவாகப் போடவும்.

- ஷோலே கபாப் மொறுமொறுப்பாகவும், அடர் பழுப்பு நிறமாகவும் மாறும் வரை, மிதமான தீயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

- சிக்கன் நன்கு பொரிந்ததும் அதை எண்ணெயை உறிஞ்சுவதற்கு டிஷ்யூ பேப்பரின் மீது போடவும். இதேபோல மீதமுள்ள சிக்கன் துண்டுகளையும் பொரித்தெடுக்கவும்.

- அதே சூடான வாணலியில், கறிவேப்பிலையை மொறுமொறுப்பாகும் வரை வறுத்து, அதையும் ஒரு டிஷ்யூ பேப்பரின் மீது போடவும்.

- இந்த வறுத்த கறிவேப்பிலையை சிக்கனின் மீது கொட்டி சூடாகப் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Sunday, September 13, 2026, 9:12 [IST]
Desktop Bottom Promotion