தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்!

Benefits Of Eating Raw Garlic In Tamil: நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சரி, உடலில் பிரச்சனைகள் வருவதற்கும் சரி முக்கிய காரணம் உணவுகள் தான். நாம் ஆரோக்கியமானது என்று நினைத்து தேர்ந்தெடுத்து சாப்பிடும் உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே வேளையில் அவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது மோசமான விளைவுகளை உண்டாக்கும்.

What Happens When You Eat Raw Garlic In The Morning Benefits Side Effects amp amp How To Eat

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஏராளமான ஆரோக்கியமான உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் பூண்டு. இந்த பூண்டை தினசரி உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இதற்கு பூண்டு உள்ள அல்லிசின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் தான் காரணம்.

என்ன தான் பூண்டு பற்களை தினசரி சமையலில் சேர்த்து வந்தாலும், "தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டை பச்சையாக உட்கொள்ளும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று குழந்தை நல மருத்துவரான டாக்டர். ஸகுல் ராமானுஜ முகுந்தன் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்த பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், வெள்ளை பூண்டின் தீமைகள் யாவை? பூண்டை எப்படி சாப்பிட வேண்டும்? பூண்டு குணப்படுத்தும் நோய்கள் என்னென்ன? பூண்டு நல்லதா? கெட்டதா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1. இதயத்திற்கு நல்லது

"பூண்டில் அல்லிசின் என்னும் கெமிக்கல் உள்ளது. அது உடலில் நைட்ரிக் ஆக்ஸைடின் உற்பத்தியை அதிகரிக்கும். இந்த நைட்ரிக் ஆக்ஸைடு உடலில் உள்ள இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். அதோடு கெட்ட கொலஸ்ட்ரால் அளவை இரத்தத்தில் குறைக்கும். இதனால் இரத்த நாள அடைப்பு நோய் வராமல் தடுக்கும். இதன் மூலம் மாரடைப்பு வராமல் தடுக்கும்" என்று டாக்டர் கூறினார்.

2. குடலுக்கு நல்லது

"நமது குடலில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் ஏராளமான பாக்டீரியாக்கள் உள்ளன. அந்த பாக்டீரியாக்கள் நாம் உண்ணும் உணவை ஜீரணம் செய்வதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த நல்ல பாக்டீரியாக்கள் வளர ப்ரீ பயோடிக்குகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த ப்ரீபயோடிக்குகள் வெங்காயம், தக்காளி, வாழைப்பழம், தயிர், பூண்டு போன்ற உணவுப் பொருட்களில் அதிகம் உள்ளது. எனவே தினமும் பூண்டை உணவில் சேர்த்து வரும் போது, செரிமான மண்டலம் நன்கு வேலை செய்யும். செரிமான பிரச்சனை வராமல் இருக்கும்" என்று டாக்டர் கூறினார்.

3. மூளைக்கு நல்லது

"தினமும் பல பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இது தவிர புகைப்பிடிப்பது, மது அருந்துவது, தவறான உணவுப் பழக்கங்களால் உடலில் ப்ரீ ராடிக்கல்கள் என்று சொல்லக்கூடிய கழிகள் சேர்கின்றன. இந்த ப்ரீ ராடிக்கல்கள் நமது உடலில் உள்ள செல்களை சேதப்படுத்தும். இதனால் புற்றுநோய், டிமென்ஷியா, நரம்பு சிதைவு நோய் போன்ற பல நோய்களின் அபாயம் அதிகரிக்கும். ஆனால் பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடலில் ப்ரீ ராடிக்கல்களின் அளவைக் குறைத்து, உடலில் உள்ள செல்கள் சேதமடைவதை தடுத்து, டிமென்ஷியா போன்ற ஞாபக மறதி நோய் வருவதைத் தடுக்கும்" என்று டாக்டர் கூறினார்.

4. நோயெதிர்ப்பு சக்திக்கு நல்லது

"தினமும் ஒரு பல் பூண்டை காலையில் சாப்பிடும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூண்டில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்ற வைட்டமின்கள், செலினியம், பாஸ்பரஸ், மாங்கனீசு போன்ற நிறைய தாதுஉப்புக்கள் உள்ளன. இது உடலில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இதன் மூலம் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, பூண்டிற்கு ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளும் உள்ளன. எனவே தான் சளி, இருமல், காய்ச்சல் இருக்கும் போது, பூண்டு ரசம் வைத்து சாப்பிடும் போது விரைவில் குணமாகிறது" என்று டாக்டர் கூறினார்.

5. இரத்த சர்க்கரை கட்டுப்படும்

"சர்க்கரை நோய் உள்ளவர்கள் பூண்டு சாப்பிடும் போது இன்சுலின் எதிர்ப்புத்தன்மை குறையும் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

இதுமட்டுமின்றி, பூண்டு இரத்தத்தை சுத்தம் செய்யும், எடை இழப்புக்கு உதவும், ஆண்மை குறைவு பிரச்சனையை சரிசெய்யும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினமும் பூண்டு சாப்பிடும் போது தாய்ப்பால் நிறைய சுரக்கும்" என்று டாக்டர் கூறினார்.

பூண்டின் பக்கவிளைவுகள்

"எவ்வளவு தான் பூண்டு நிறைய நன்மைகளை வழங்கினாலும், அதிகமாக சாப்பிடும் போது தீமைகளை சந்திக்க நேரிடும். ஒரு நாளைக்கு ஒருவர் 4-5 பல் பூண்டு சாப்பிடலாம். அதுவே 10-15 பல் பூண்டு சாப்பிட்டால் சந்திக்கும் பிரச்சனைகள் பின்வருமாறு:

* இரத்தப்போக்கு அதிகரிக்கும்
* கல்லீரல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது
* வயிற்றுப் புண், நெஞ்செரிச்சல்
* கர்ப்பிணிகள் பூண்டு அதிகமாக சாப்பிடக்கூடாது

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்து பூண்டை அளவாக சாப்பிட்டால், அதன் முழுமையான மருத்துவ குணங்களைப் பெறலாம்" என்று டாக்டர் கூறினார்.

எப்படி சாப்பிட வேண்டும்?

"தினமும் காலையில் பூண்டை பச்சையாக சாப்பிடுவது நல்லது. அதற்கு ஒரு பல் பூண்டை எடுத்து பொடியாக நறுக்கியோ அல்லது தட்டியோ 5 நிமிடம் காற்றோட்டமாக வைக்க வேண்டும். ஏனெனில் பூண்டை இப்படி காற்றோட்டமாக வைக்கும் போது, அதில் உள்ள கெமிக்கல் காற்றுடன் வினைபுரிந்து சிறப்பான கெமிக்கலாக மாறும். அதன் பின் அதை மென்று சாப்பிடும் போது, முழு மருத்துவ குணங்களும் உடலுக்கு கிடைக்கும்" என்று டாக்டர் கூறினார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, September 12, 2026, 13:31 [IST]
Desktop Bottom Promotion