ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்

Posted By:

Andhra Potato Thokku Recipe in Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? அதனாலேயே அடிக்கடி வீட்டில் உருளைக்கிழங்கை செய்வீர்களா? உருளைக்கிழங்கை எப்போதும் ஒரே மாதிரி வறுவல் அல்லது பொடிமாஸ்தான் செய்வீர்களா? உருளைக்கிழங்கை புது சுவையில் வித்தியாசமாக சமைக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கை முயற்சி செய்து பாருங்க.

Andhra Potato Thokku Recipe How to Make at Home in Tamil

இந்த உருளைக்கிழங்கு தொக்கு நீங்கள் வழக்கமாக சாப்பிடும் சாப்பிடும் பொரியல் போல அல்லாமல் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த தொக்கு சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்த தொக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் உருளைக்குழங்கு தொக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இந்த ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 2 உருளைக்கிழங்கு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 பச்சை மிளகாய் (நீளமாக கீறியது)
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 2 சிறிய தக்காளி (நறுக்கியது)
- தேவையான அளவு உப்பு
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் சாம்பார் பொடி
- அலங்கரிக்க கொத்தமல்லி இலைகள்

தாளிக்க:

- 2 ஸ்பூன் எண்ணெய்
- ¼ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- ½ ஸ்பூன் சீரகம்

செய்முறை:

- முதலில் உருளைக்கிழங்கை நறுக்கி குக்கரில் போட்டு போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

- பிரஷர் வெளியேறியதும் அதன் தோலை நீக்கி, சதுர துண்டுகளாக நறுக்கி தனியே எடுத்து வைக்கவும். ஆனால், உருளைக்கிழங்கு அதிகமாக வெந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

- பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, ' கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

- உளுத்தம் பருப்பு பொன்னிறமாக மாறியதும், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

- அதன்பின் வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

- வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும்.

- அதன்பின் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடியைச் சேர்த்து, அனைத்தும் நன்றாகக் கலக்குமாறு கிளறவும்.

- ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒருமுறை கிளறிவிட்டு, மிதமான தீயில் சமைக்கவும்.

- கலவை நன்றாகக் கொதித்து, அதன் மேல் பகுதியில் எண்ணெய் பிரியத் தொடங்கியதும், உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

- கலவை கெட்டியாகும் வரை காத்திருக்கவும். மசாலா பச்சை வாசனை நீங்கி நன்றாக வதங்கும் வரை சில நிமிடங்கள் கிளறவும்.

- நன்றாக கொதித்து தொக்கு பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து அடுப்பை அணைக்கவும்.

- அவ்வளவுதான் சூப்பரான ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெடி.

[ of 5 - Users]
Story first published: Friday, September 11, 2026, 21:47 [IST]
Desktop Bottom Promotion