தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க

இந்திய வரலாற்றில் பல தனித்துவமான அரசர்கள் இருந்துள்ளனர். கடந்த காலங்களில் இந்தியா மிகப்பெரிய செல்வந்த நாடாக இருந்தது. பல அரசர்கள் தங்களின் செல்வத்தை உலகமே வியக்கும் படி தாராளமாக செலவு செய்தனர். வரி விதிப்பு, அரசரின் தனிப்பட்ட நிதி ஒதுக்கீடு ஒழிப்பு மற்றும் நவீன ஆட்சிமுறை ஆகியவை வருவதற்கு முன்பு, இந்தியாவின் அரசர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தனர்.

Indian Kings Who Spent Lavishly on Bizarre Items

அவர்களின் வாழ்க்கை முறை என்பது வரலாறு என்பதை விட பைத்தியக்காரத்தனமாகவே இருந்தது. விலை உயர்ந்த கார்களை குப்பைத் தொட்டிகளாக பயன்படுத்துவது முதல் நாய்களுக்கு பிரம்மாண்ட திருமணம் வரை அவர்களின் செயல்கள் மிகவும் விநோதமானதாக இருந்தது. இந்த பதிவில் நம்ப முடியாத அளவிற்கு ஆடம்பர செலவுகளை அற்ப காரணங்களுக்காக செய்த சில வினோத இந்திய அரசர்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஜுனாகத் மன்னர்

ஜுனாகத் மன்னர் 800 நாய்களை வளர்த்து வந்தார். அந்த நாய்கள் ஒவ்வொன்றுக்கும் தனி அறையும், அதற்கென ஒரு தனிப் பணியாளரும் இருந்தனர். நாய்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவை சிகிச்சைக்காகப் பிரிட்டிஷ் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டன. மிகவும் பிரியமான நாய் ஒன்று இறந்துவிட்டால், அதற்காக ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும். அனைத்திற்கும் மேலாக அவருக்கு மிகவும் பிடித்த இரண்டு நாய்கள் இணை சேர்ந்தபோது, அவற்றின் "திருமணத்திற்காக" ஏறக்குறைய 20 லட்சம் ரூபாயைச் செலவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இதற்காக அரசு விடுமுறையும் அளிக்கப்பட்டது.

மகாராணி இந்திரா தேவி

20-ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான மற்றும் விலையுயர்ந்த காலணி வடிவமைப்பாளர்களில் ஒருவரான சால்வடோர் ஃபெர்ராகமோவிடமிருந்து, மகாராணி இந்திரா தேவி 100 ஜோடிகளுக்கும் மேற்பட்ட காலணிகளை வாங்கினார், அவற்றில் சில காலணிகளில் வைரக் கற்கள் பதிக்கப்பட்டது. இத்தாலிய காலணித் தயாரிப்பாளரான ஃபெர்ராகாமோ, பின்னர் தனது நினைவுக் குறிப்புகளில், மகாராணியின் காலணி கலெக்ஷன் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மிர் உஸ்மான் அலி கான்

ஹைதராபாத்தின் கடைசி நிஜாமான மிர் உஸ்மான் அலி கான் எவ்வளவு பெரும் செல்வந்தராக இருந்தார் என்றால், உலகின் ஐந்தாவது மிகப்பெரிய வைரமான 184.97 காரட் எடையுள்ள 'ஜேக்கப் வைரம்' (Jacob Diamond) ஒன்றை அவர் பேப்பர் வெய்ட்டாக பயன்படுத்தினார். அக்காலத்தில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களைத் தன்வசம் கொண்டிருந்த அவர், உலகின் மிகப்பெரிய செல்வந்தராகத் திகழ்ந்தார். நெருப்புக்கோழி முட்டையின் அளவுள்ள அந்த விலைமதிப்பற்ற வைரம், தற்போது இந்திய அரசின் உடைமையாக உள்ளது.

மகாராஜா சவாய் மாதோ சிங் II

இங்கிலாந்துக்கு சென்ற போது கங்கை நீரை எடுத்துச் செல்வதற்காக, உலகின் மிகப்பெரிய அளவிலான இரண்டு பிரம்மாண்டமான ஸ்டெர்லிங் வெள்ளிப் பாத்திரங்களைச் செய்வித்ததன் மூலம் மகாராஜா சவாய் மாதோ சிங் II கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். 14,000 வெள்ளி நாணயங்களை உருக்கி இந்தப் பிரம்மாண்டமான பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன.

மகாராஜா ஜகத்ஜித் சிங்

ஆடம்பர பிராண்டான லூயி விட்டான்னின் மிகச்சிறந்த வாடிக்கையாளர் யாரென்றால் அவர் கபூர்தலாவின் அரசரான ஜகத்ஜித் சிங்தான். அந்த மகாராஜா ஒரு தீவிர பயணப் பிரியராக விளங்கினார். அவர் எங்கு சென்றாலும், அவருடைய உடைகள், தலைப்பாகைகள், வாள்கள் மற்றும் செல்வங்களைச் சுமந்து செல்வதற்காக, 60-க்கும் மேற்பட்ட பெரிய லூயி விட்டான் பெட்டிகளை வைத்திருந்தார்.

மகாராஜா கங்கா சிங்

பிகானேரின் மகாராஜா கங்கா சிங், ஆண்டுக்கு ஒருமுறை ஏழைகளுக்குத் தனது உடல் எடைக்கு இணையான தங்கத்தை வழங்கினார். அந்தப் பெருந்தன்மை கொண்ட மன்னர் எவ்வளவு அதிக அளவில் தங்கத்தை வழங்கினார் என்றால், அவரது ஆட்சிக்காலத்தில் ஏழைகளின் செல்லப்பிராணிகள் கூட தங்க ஆபரணங்களால் முழுமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.

குவாலியர் மகாராஜா

இந்தியர்கள் விருந்தோம்பலில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. தனது விருந்தினர்களுக்கு மிகச்சிறந்த ஆடம்பரமான உபசரிப்புகளை வழங்குவதில் குவாலியர் மகாராஜா சிறந்தவராக விளங்கினார். உண்மையான வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு சிறிய ரயில் அவரிடம் இருந்தது, அரச விருந்து மேஜையில் ஓடும் அந்த ரயில், அமர்ந்திருந்த விருந்தினர்களுக்குச் சுருட்டுகளையும் மதுபானங்களையும் கொண்டு சென்று பரிமாறியது. அந்தச் சிறிய ரயிலின் மீது மகாராஜாவுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்ததால், ஒவ்வொரு அரச விருந்தின் இறுதியிலும் அதை அவர் காட்சிக்கு வைப்பார்.

மகாராணா சஜ்ஜன் சிங்

உதய்பூரின் மகாராணா சஜ்ஜன் சிங் படிகங்கள் மீது தீவிர ஆர்வம் கொண்டவராக விளங்கினார், எனவே தனது அரண்மனை முழுவதையும் படிகங்களால் அலங்கரிக்க முடிவு செய்தார். அவர் இங்கிலாந்தில் உள்ள 'எஃப்&சி ஆஸ்லர்' நிறுவனத்திடமிருந்த அனைத்து படிகங்களையும் வாங்கினார். அதில் மேசைகள், நாற்காலிகள், சீலிங் பேன், கண்ணாடிகள் மற்றும் வாசனைத் திரவிய பாட்டில்கள் கூட அடங்கும். மகாராணா தனது படுக்கையைக்கூட படிகத்தால் செய்ய வைத்தார், அதுவே உலகின் ஒரே படிகப் படுக்கையாகும்.

மகாராணி சீதா தேவி

இந்தியாவின் மிகவும் ஆடம்பரமான இந்திய ராணிகளில் ஒருவரான மகாராணி சீதா தேவி, ஐரோப்பாவிலிருந்து தங்கத்தாலான நாக்கை சுத்தம் செய்யும் கருவியை ஆர்டர் செய்து தயாரித்திருந்தார். அவரிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புடவைகள் இருந்ததாகவும், ஒவ்வொன்றிற்கும் ஏற்றவாறு தனித்தனி கைப்பைகளும் காலணிகளும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட சிகரெட் பிடிக்கும் கருவி கூட அவரிடம் இருந்தது.

ஷாஜகான்

தாஜ் மஹால் பற்றி இந்தியர்கள் அனைவரும் நன்கு அறிவோம். ஆனால், அதை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட அளப்பரிய முயற்சிகள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அதன் கட்டுமானப் பணிகளின்போது கனமான பொருட்களைத் தூக்குவதற்கு 1,000-க்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும், தாஜ் மஹாலின் அழகான வெண் பளிங்குக் கற்களில், ஆசியா முழுவதும் இருந்து சேகரிக்கப்பட்ட 28 வகையான விலையுயர்ந்த மற்றும் அரை-விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டன.

Story first published: Friday, September 11, 2026, 11:09 [IST]
Desktop Bottom Promotion