Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்..

Ganesh Chaturthi 2026: இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படக்கூடிய ஒரு பண்டிகை தான் விநாயகர் சதுர்த்தி. முழுமுதற் கடவுளான விநாயகர் பிறந்த நாள் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் களிமண் விநாயகர் சிலையை வீட்டிற்கு வாங்கி வந்து, விநாயகரை அழகாக அருகம்புல், எருக்கம்பூ போன்றவற்றால் அலங்கரித்து, அவருக்கு பிடித்த கொழுக்கட்டை, லட்டு, சுண்டல் போன்ற பலகாரங்களை செய்து படைத்து, பூஜைகளை செய்து வழிபாடு செய்வார்கள்.

Ganesh Chaturthi 2026 21 Ilai Archanai - List Of 21 Leaves And Their Benefits

அப்படி விநாயக வழிபாடு செய்யும் போது அவருக்கு 21 வகையான இலைகளை படைத்து வழிபடும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்துள்ளது. இப்படி 21 இலைகளால் செய்யப்படும் பூஜைக்கு 'ஏகவிம்சதி பத்ர பூஜை' என்று பெயர். இந்த பூஜை செய்வது மிகவும் விஷேசமானது, சகல நன்மைகளையும் வழங்கக்கூடியது. உங்களுக்கு விநாயகருக்கு படைக்கக்கூடிய 21 வகையான இலைகள் பற்றி தெரியாதெனில், உங்களுக்காக அந்த 21 வகையான இலைகள் எவை என்பதையும், அவற்றால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்பதையும் கொடுத்துள்ளோம்.

1. முல்லை இலை - விநாயக பெருமானுக்கு முல்லை இலைகளை கொண்டு பூஜிக்கும் போது தொழில் வளர்ச்சி, சமூகத்தில் மதிப்பு, புகழ் போன்றவை தேடி வரும். மேலும் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

2. கரிசலாங்கண்ணி இலை - விநாயகருக்கு கரிசலாங்கண்ணி இலைகளை சமர்ப்பிக்கும் போது, அது வாழ்க்கைக்கு தேவையான செல்வத்தை தரும்.

3. வில்வ இலை - விநாயகருக்கு வில்வ இலையால் பூஜை செய்யும் போது தடைகள் நீங்கும், மன அமைதி கிடைக்கும், விரும்பிய அனைத்தும் கிட்டும்.

4. அருகம்புல் - விநாயகருக்கு அருகம்புல்லை படைத்து வழிபடும் போது வாழ்வில் உள்ள அனைத்து தடைகளும் அகலும். அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

5. இலந்தை இலை - விநாயக பெருமானுக்கு இலந்தை இலையால் பூஜை செய்யும் போது, அது மனம் அமைதியடைந்து ஆன்மீக ஞானம் பெருகும் மற்றும் கல்வியில் மேன்மையை அடையலாம்.

6. ஊமத்தை இலை - பிள்ளையாருக்கு நச்சுத்தன்மை வாய்ந்த ஊமத்தை இலையால் பூஜிக்கும் போது, ராகு-கேது தோஷங்களும், மன உளைச்சலும் நீங்கும் என்பது நம்பிக்கை.

7. வன்னி இலை - விநாயகருக்கு வன்னி இலையால் அர்ச்சனை செய்யும் பொது, அது நம் வாழ்வில் உள்ள எதிர்ப்புகள், தடைகள் மற்றும் பயம் போன்றவற்றை நீக்கும். செய்யும் காரியங்களில் வெற்றி கிட்டும். சனி தோஷங்கள் குறைந்து, சனியின் தாக்கம் குறையும்.

8. நாயுருவி இலை - விநாயக பெருமானுக்கு நாயுருவி இலையால் அர்ச்சனை செய்யும் போது, கல்வி மற்றும் ஞானம் பெருகும். மேலும் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். அதோடு முகப் பொலிவும், அழகும் கூடும்.

9. கண்டங்கத்திரி இலை - விநாயகருக்கு கண்டங்கத்திரி இலையை படைத்து வழிபாடு செய்யும் பாது தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.

10. மந்தாரை இலை - விநாயகருக்கு மந்தாரை இலையால் பூஜை செய்யும் போது, எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

11. எருக்கம் இலை - கணபதிக்கு எருக்கம் இலை கொண்டு அர்ச்சனை செய்யும் போது குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும்.

12. மருத இலை - விநாயகருக்கு மருத இலையால் வழிபாடு செய்யும் போது வாழ்வில் உள்ள கஷ்டங்கள் குறையும், மகப்பேறு உண்டாகும்.

13. விஷ்ணுகிராந்தி இலை - விநாயக பெருமானுக்கு விஷ்ணுகிராந்தி இலை கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்யும் போது, கல்வி, தொழிலில் வெற்றி கிடைக்கும். புத்திக்கூர்மை ஏற்படும்.

14. மாதுளை இலை - விநாயகருக்கு மாதுளை இலை கொண்டு அர்ச்சனை செய்யும் போது, புகழும், நற்பெயரும் கிடைக்கும். மேலும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

15. தேவதாரு இலை - பிள்ளையாருக்கு தேவதாரு இலையால் பூஜை செய்யும் போது வாழ்வில் உள்ள துன்பங்கள் குறையும், எப்பேற்பட்ட சவாலையும் எதிர்கொள்ளும் மன தைரியம் கிடைக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

16. மரிக்கொழுந்து இலை - நல்ல நறுமணமிக்க மரிக்கொழுந்து இலையை விநாயகருக்கு படைத்து வழிபடும் போது தடைகள் நீங்கும், மன அமைதி கிடைக்கும்.

17. அரச இலை - விநாயக பெருமானுக்கு அரச இலையால் அர்ச்சனை செய்தால் அனைத்து தேவர்களின் ஆசி கிடைப்பதோடு, சனியால் சந்திக்கும் தடைகளும், தோஷங்களும் நீங்கும்.

18. அகத்தி இலை - விநாயகருக்கு அகத்தி இலை கொண்டு பூஜை செய்யும் போது, வாழ்வில் உள்ள தடைகள் மற்றும் துன்பங்கள் நீங்கும். தெரியாமல் செய்த பாவங்கள் குறையும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

19. மாவிலை - விநாயகருக்கு மாவிலையால் பூஜை செய்யும் போது குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும், செய்யும் காரியங்களில் உள்ள தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

20. ஜாதிமல்லி இலை - விநாயக பெருமானுக்கு ஜாதிமல்லி இலையால் அர்ச்சனை செய்யும் போது, கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

21. தாழம்பூ இலை - கணபதிக்கு தாழம்பூ இலை கொண்டு பூஜை செய்யும் போது, வாழ்வில் உள்ள தடைகள் மற்றும் தொழில் முடக்கங்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதியும், மன நிம்மதியும் கிட்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, September 12, 2026, 14:51 [IST]
Desktop Bottom Promotion