பீட்ரூட் பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Beetroot Poori With Coconut Chutney Recipe In Tamil: எப்பவும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படி போரடிக்கும் போது சப்பாத்தி, பூரி செய்து சாப்பிடுவீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் பூரியை விரும்பி சாப்பிடுவார்களா? எப்பவும் பூரியை வெறுமனே தான் செய்வீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் பீட்ரூட் இருந்தால், அதைக் கொண்டு பூரி செய்யுங்கள்.

Beetroot Poori With Coconut Chutney How To Make This Tasty Breakfast

இந்த பீட்ரூட் பூரி கண்களை கவரும் வகையில் இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். அதுவும் அந்த பூரிக்கு தேங்காய் சட்னி அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். இப்படி காலை வேலையில் ஒரு டிபனை செய்யும் போது, அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த பீட்ரூட் பூரி மற்றும் தேங்காய் சட்னி குறித்து அபூர்வாஸ் விருந்து என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த பீட்ரூட் பூரியும், தேங்காய் சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் பூரி, தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பூரிக்கு...

* பெரிய பீட்ரூட் - 1
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 5 பல்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கோதுமை மாவு - 1 1/2 கப்
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு

சட்னிக்கு...

* தேங்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 2 பல்
* சின்ன வெங்காயம் - 5
* பச்சை மிளகாய் - 2
* புதினா - 10 இலை
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

சட்னி தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் துண்டுகளாக்கப்பட்ட பீட்ரூட்டை எடுத்து, அத்துடன் 2 பச்சை மிளகாய், 1 இன்ச் இஞ்சி, 5 பல் பூண்டு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த பீட்ரூட்டை எடுத்துக் கொண்டு, அதில் 1 1/2 கப் கோதுமை மாவை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி மேலே தடவி மூடி வைத்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து, மூடியைத் திறந்து, அவற்றை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒவ்வொரு உருண்டைகளையும் பூரி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை சேர்த்து பொரித்து எடுத்தால், சுவையான பீட்ரூட் பூரி தயார்.
* பின்னர் சட்னி செய்வதற்கு மிக்சர் ஜாரில் நறுக்கிய தேங்காய், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும்.
* அடுத்து சட்னி தாளிப்பதற்கு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், தேங்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, May 21, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion