ஆயுத பூஜைக்கு இந்த பக்குவத்துல சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...

Posted By:

Ayudha Pooja Special Masala Sundal Recipe: பொதுவாக ஆயுத பூஜைக்கு வீட்டில் சுண்டல் செய்து படைத்து வழிபடுவது வழக்கம். அப்படி பூஜைக்கு சுண்டல் செய்வதாக இருந்தால், வெங்காயம், பூண்டு என்று எதுவும் சேர்க்காமல் செய்ய வேண்டும். இதனால் நிறைய பேர் சாமிக்கு என்று தனியாக சுண்டலை வேக வைத்து, பின் சாப்பிட தனியாக சுண்டலை தாளிப்பார்கள்.

ஆனால் ஒரே வேலையில் முடிக்க வேண்டுமென்று விரும்பினால், ஆயுத பூஜைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு சுண்டலை செய்யுங்கள். இப்படி செய்யும் போது சுண்டலை சாமிக்கும் படைக்கலாம், நாமும் அப்படியே சாப்பிடலாம். இந்த சுண்டலின் ஸ்பெஷலே, அதில் வறுத்து சேர்க்கும் மசாலா பொடி தான். முக்கியமாக இப்படி ஒருமுறை சுண்டலை செய்தால், பின் எந்த ஒரு பண்டிகை வந்தாலும், இப்படி தான் செய்வீர்கள்.

Ayudha Pooja Sundal Recipe How To Make a Masala Sundal

உங்களுக்கு மசாலா சுண்டலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா சுண்டல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* வெள்ளை சுண்டல் - 1/4 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப

மசாலாவிற்கு...

* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 3

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருபபு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* மஞ்சள் தூள் - 1/4
* துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் வெள்ளை சுண்டலை நீரில் குறைந்தது 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் ஊற வைத்த வெள்ளை சுண்டலை நீரில் 2 முறை கழுவி சேர்த்து, சுண்டல் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டி வெளியேற்றிவிட்டு, சுண்டலை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மல்லி விதைகள், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து, குறைவான தீயில் வைத்து, நன்கு பொன்னிறமாக ப்ரை செய்து இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், மஞ்சள் தூள், துருவிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த சுண்டலை சேர்த்து, அதோடு அரைத்த மசாலா பொடியையும் சேர்த்து 2-3 நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* சுண்டல் வறண்டு போகாமல் இருக்க, கடைசியாக சிறிது சுண்டல் வேக வைத்த நீரை தெளித்துவிட்டு, 2 நிமிடம் நன்கு நீர் வற்ற கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மசாலா சுண்டல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 30, 2025, 20:40 [IST]
Desktop Bottom Promotion