கருவிற்கு நன்மை தரும் யோகாசனம்

By Mayura Akilan

Benefits of Yoga During Pregnancy
யோகாசனம் மனதிற்கும் உடலிற்கும் ஏற்றது. நோய்களில் இருந்து உடலை பாதுகாப்பதோடு நோய் ஏற்படாமலும் தடுக்கிறது. கர்ப்பிணிகளுக்கு யோகாசனம் சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பிரசவ கால சிக்கல்களை தீர்க்க உதவுவதோடு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும், உடல் வலிகளையும் நீக்குகிறது என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

கர்ப்பிணிகளுக்கு ஆசனங்கள்

கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதங்களில் சாதாரணமாக யோகாசனம் செய்யலாம். அதன் பிறகு குருவின் ஆலோசனைப்படி கர்ப்பிணிகளுக்கு என்று பிரத்யேகமான உள்ள ஆசனங்களை செய்யலாம் என்கின்றனர் மருத்துவர்கள்

பிரசவம் எளிதாகும்

தடாசனம் பக்தகோணாசனம், வஜ்ராசனம், நமஸ்காராசனம், ஆனந்த சயனாசம், மகாமுத்திரா பாலாசனம், சவாசனம் போன்றவை சிறந்த ஆசனங்கள். கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு மகாமுத்திரா மிகவும் நல்லது. ஜீரண சக்தி அதிகரிக்கும். இடுப்பு தசைகள், நரம்புகள் வலிமை பெறும். இதனால் குழந்தை பிறப்பு சுலபமாகும்.

நின்ற நிலை ஆசனம்

எளிதான இந்த ஆசனம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. முதலில் காலை விரித்து நிற்க வேண்டும். கையை மேலே தூக்கி கும்பிட்ட மாதிரி நான்கு தடவை, இயல்பாக மூச்சை விட்டபடி செய்யவேண்டும். பின்பு கையை நேராக வைத்து, மூச்சை உள்ளே இழுக்கும் போது கையை விரித்து, மூச்சை வெளியே விடும்போது மடக்கவேண்டும். இந்த ஆசனம் செய்வதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு உச்சி முதல் பாதம் வரை உற்சாகம் தரும்.

பூனை ஆசனம்

முதலில் கவிழ்ந்து, முட்டி போட்டு நிற்க வேண்டும். தரையை பார்த்தவாறு மூச்சை உள்வாங்கி, முதுகை மட்டும் மேலே தூக்கவேண்டும். பின்பு மூச்சை வெளியே விட்டு, தலையை தூக்கி முதுகை உள்வாங்கவேண்டும். இதை 5 முறை செய்தால் கர்ப்பிணிகளின் முதுகுதண்டு பலமாகும். முதுகு வலி ஏற்படாது.

கர்ப்பிணி பெண்கள் யோகாசனங்கள் செய்வது மிகவும் நல்லது. இதனால் கருவுக்கும் நன்மை ஏற்படும். ஆசனங்கள் கர்ப்பிணிப் பெண்களின் இரத்த ஒட்டத்தை அதிகரித்து, முதுகெலும்புக்கு இரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். தவிர உடலின் கீழ் பாகங்களுக்கு ரத்த ஒட்டம் அதிகரிக்கும்.

Story first published: Tuesday, April 24, 2012, 11:28 [IST]
Desktop Bottom Promotion