நிலம், வீடு வாங்க புதிய விதி.. இனி சிரமம் இருக்காது.. பான் கார்டு வரம்பை உயர்த்தும் அரசு.. இதோ முழு விவரம்..

By Prakash S

பான் (PAN) என்று அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) வைத்திருக்கும் மக்களுக்கு ஒரு பெரிய மாற்றம் வருகிறது. அதாவது புதிய வருமான வரி விதிகள் 2026 விரைவில் சொத்து பரிவர்த்தனைகளுக்கு பான கார்டு வழங்கும் வரம்பை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்க வருமான வரித் துறை முன்மொழிந்துள்ளது.

இந்த மாற்றம் செயல்படுத்தப்பட்டால் ரூ.20 லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள சொத்து பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு விவரங்கள் இனி தேவை இருக்காது. பான் கார்டு விதிமுறை மட்டுமின்றி, வரி இணக்க கட்டமைப்பில் பரிசுகள் மற்றும் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தங்கள் போன்ற விஷயங்களையும் சேர்க்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.


PAN-rule-April-1-update

சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு விதிகளின்படி, ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளுக்கு பான் விவரங்களை வழங்குவதற்கான வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 20 லட்சத்திற்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு பான் என் வழங்கத் தேவையில்லை.

தற்போது உள்ள விதிகளின்படி, வீடு, நிலம், பிளாட் வாங்குதல் அல்லது விற்பதற்கான பரிவர்த்தனை மதிப்பு ரூ.10 லட்சத்திற்கும் மேல் இருந்தால் அதை வாங்குபவரும் விற்பவரும் தங்களுடைய பான் கார்டு விவரங்களை வழங்க வேண்டும். ஆகவே புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால், சிறிய நகரங்கள் மற்றும் குறைந்த விலை சந்தைகளில் உள்ள சொத்து வாங்குபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். காரணம் என்னவென்றால் குறைந்த மதிப்புள்ள ஒப்பந்தங்களில் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் சுமை குறையும்.

அதேபோல் நில உரிமையாளரும் டெவலப்பரும் இணைந்து ஒரு திட்டத்தை மேற்கொள்ளும்போது அவற்றை பான் கார்டு விதிகளின் எல்லைக்குள் சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய மாற்றம் அதிகரித்து வரும் சொத்து விலைகள் மற்றும் சந்தை மதிப்பீடுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக வரி வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

பான் கார்டு வரம்பை அதிகரிப்பது, குறிப்பாக பெருநகரங்கள் அல்லாத மற்றும் சிறிய நகரங்களில் நிலம் வாங்குபவர்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் இது சிறிய ஒப்பந்தங்களில் உள்ள ஆவணச் சுமையைக் குறைக்கும். இந்த விதிமுறைகள் தற்போது வரைவு வடிவத்தில் உள்ளன. இறுதி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு மத்திய அரசு மற்ற பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறும். அனைத்து பரிந்துரைகளையும் மதிப்பாய்வு செய்த பின்பு தான் இந்த விதிமுறைகள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.


வாகனங்கள் வாங்கும் மக்களுக்கும் புதிய விதிகள் வர உள்ளன. அதாவது விரைவில் வர உள்ள புதிய விதியின்படி ரூ.5 லட்சத்திற்கும் மேலான இருசக்கர வாகனங்களை வாங்கினால் பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். அதேபோல் கார் வாங்கினாலும் பான் கார்டு கட்டாயம் ஆகும். இதற்கு டிராக்டர்கள் மட்டும் விதிவிலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு கூறியபடி, இப்போது வரைவு விதிகள் வெளியாகி உள்ள நிலையில் வரும் 2026 ஏப்ரல் 1 முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டம் 1961-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. எனவே தான் தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் வருமான வரிச் சட்டங்களைப் புதுப்பிக்கப்பட உள்ளது.

Credit: Gizbot

Story first published: Friday, February 27, 2026, 20:17 [IST]
Desktop Bottom Promotion