For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிஷப ராசிக்காரர்களுக்கு விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது?...

2018 ஆம் ஆண்டு சித்திரை முதல் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் விளம்பி வருடமாகப் பிறக்கிறது. அதில் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்று பார்ப்போம்.

|

(கார்த்திகை, 2, 3, 4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ரிஷப ராசிக்காரர்களுக்கு இநத விளம்பி வருடம் என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிதாகப் பிறக்கும் விளம்பி தமிழ்ப் புத்தாண்டு வாழ்க்கையைப் புரிய வைக்கும் ஆண்டாக மாறும். பல்வேறு மாற்றங்களையும் படிப்பினைகளையும் கற்றுத் தருவதாக இருக்கும். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு தற்போது இருக்கும் நிலையில் இருந்து வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் எதிர்பாராத பெரிய மாற்றங்கள் கூட நிகழலாம்.

tamil new year 2018

இளையவர்களுக்கு வரப்போகும் மாற்றங்களினால் உங்களின் எதிர்காலத்திற்கான நன்மைகள் மட்டும்தான் இருக்கும் என்பதால் இளம்வயதினர் இந்த தமிழ்ப் புத்தாண்டில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நடுத்தர வயதினருக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பின்னடைவுகள் ஏற்படும் என்பதால் அனைத்திலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் பங்குதாரர்களிடமும் புதிய கூட்டாளிகளைச் சேர்ப்பதிலும் கவனமாக இருங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.

விளம்பி வருடத்தின் சிறப்பு பலனாக தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத் தொழில் செய்பவர்கள் உங்களுடைய வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். அவர்களுக்கு வேலையை ஒதுக்கிக் கொடுத்தாலும் எல்லா விஷயத்திலும் உங்களுடைய ஒரு கண்ணையும் வைத்திருப்பது நல்லது.

வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான பயண அலைச்சல்கள் உண்டாகும். வருடம் கடன் கொடுக்கல், வாங்கல் செய்யாமல் இருப்பது நல்லது. சொந்த வீட்டில் உள்ளவர்களைத் தவிர யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக எப்போதையும்விட கடுமையாக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.

சுயதொழில் செய்வோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதை முடிந்தவரை தவிர்க்க பாருங்கள். கையிலிருப்பதை வைத்து சமாளிக்கக் கற்றுக் கொள்ளங்கள். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கோ வருமானம் வரும் வகையில்தான் செலவாகும். ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில் சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு ஓரளவு நல்ல பலன்களை அனுபவிக்க முடியும்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறை ரீதியான தேவையில்லாத மாற்றங்கள் உண்டாகும். வீடு அல்லது தொழில் மாற்றம் ஏற்படும்.

அஷ்டம சனியின் ஆதிக்கத்தால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். வெளி மாநிலங்களுக்குச் செல்வீர்கள். நீண்ட தூரப் பயணங்களால் லாபங்கள் ஓரளவு இருக்கும். ஆனாலும் அதை தவிர்க்க இயலாது. இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள்.

பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். சிலருக்கு மறைமுகமான வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகள் இருக்கும். பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும்.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். கம்ப்யூட்டர் சம்பந்தமாக படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் தேக்க நிலையும், மந்தமான போக்கும், மறதிகளும் ஏற்படும்.

பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே விரோதிகளும் சிக்கல்களும் சேர்ந்தே வரும். அதில் மாட்டிக் கொள்ளாமல் இருங்கள்.

நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே உஷாராக இருங்கள்.

எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில் செய்வது வேண்டாம். அது சரியாக வராது. இருக்கும் வீட்டை விற்று புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது வேண்டாம். சொந்த வீட்டை விற்று அந்தப் பணம் வேறுவகையில் செலவாகி வாடகை வீட்டில் இருக்கும்படி சந்தர்ப்பம் கூட உண்டாகும். அதனால் சொத்து விற்பது வாங்குவது போன்ற விஷயத்தில் கொஞ்சம் நிதானமாகவே இருங்கள்.

நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் ஆகிய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உடல் நலத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அடிதடி சண்டை போன்றவைகளால் நீதிமன்றத்துக்கும் காவல்துறைக்கும் அலைய வேண்டிய சூழல் உருவாகும். எதிலும் கவனம் தேவை.

ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அதை உடனே முடித்தாக வேண்டும் என்று அவசரப்பட வேண்டாம். தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம். குடும்பப் பிரச்னைகளுக்காகவும் சொத்து பிரச்னைக்காகவும் நீதிமன்றம் செல்லக் கூடிய காலகட்டம் இது.

பெண்களுக்கு ஓரளவு நல்ல பலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பளஉயர்வு தற்போது கிடைக்கும். அலுவலகத்தில் சுமூகமான சூழ்நிலை உருவாகும். உங்களுடைய திறமை உங்களுடைய மேலதிகாரிக்கும் முதலாளிக்கும் முழுமையாகத் தெரிய வரும்.

தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு பேரை கெடுத்துக் கொள்வீர்கள். ஜாமீன் போடுவது மற்றும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் நிமிடத்தில் கெட்டுப்போய்விடும் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு கவனமாக இருங்கள்.

ரிஷபத்தினர் வேலை, தொழில் விஷயங்களில் நிதானமாகவும் பொறுமையுடனும் இருப்பதன் மூலம் சாதகமற்ற பலன்களைக் கூட உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் வருடமாக இது அமையும்.

Read more about: tamil new year
English summary

rishabam rasi vilambi tamil new year horoscope 2018

tamil new year vilambi varuda palangal 14.4.18
Story first published: Saturday, April 14, 2018, 12:16 [IST]
Desktop Bottom Promotion