ரஜினிகாந்த் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்: பிறந்தநாள் ஸ்பெஷல்

By Ashok CR

இன்று தமிழ் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள பல மக்களை தன் காந்த சக்தியால் கட்டி போட்டு வைத்திருக்கும் அந்த மந்திரச் சொல் தான் "ரஜினி". இவர் பெயரை திரையில் காணும் போது எழும் சந்தோஷத்தை பற்றியும் கூக்குரலை பற்றியும் சொல்லி தீராது; அதை அனுபவித்தால் தான் புரியும். இன்று பிறந்த நாள் காணும் அவரைப் பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக உள்ளதா?

அப்படியானால் கீழே அவரைப் பற்றிய சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவரது முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Facts about Rajnikanth: Birthday Special

1. கிருஷ்ணகிரியில் உள்ள நொச்சி குப்பத்தை பூர்வீகமாக கொண்டு பெங்களூருவில் வாழ்ந்த ஜீஜாபாய் மற்றும் ராமோஜி ராவ் கெய்க்வாட் என்ற மஹாராஷ்ரிய தம்பதிகளுக்கு பிறந்த நான்காவது கடைக்குட்டி தான் 'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்ற நம் 'சூப்பர் ஸ்டார்'.

2. தன்னுடைய இளமை பருவத்தில் பல வேலைகளை செய்து வந்தார் ரஜினி. கூலியாகவும். பேருந்தில் நடத்துனராகவும் பணியாற்றியுள்ளார். தன்னுடைய நண்பர் ராஜ் பகதூரின் தூண்டுதல் மற்றும் ஆதரவினால் தான் சென்னைக்கு நடிக்க வந்தார் ரஜினி.

3. எதிர்மறையான பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர், மெல்ல குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். பின் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். பைரவி நேர படத்தில் நடிக்கும் போது அதன் தயாரிப்பாளர் தானுவால் அவருக்கு வைக்கப்பட்ட பட்டமே சூப்பர் ஸ்டார்.

4. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். "ப்ளட் ஸ்டோன்" என்று இவர் நடித்த ஆங்கில படம் 1988 ஆம் ஆண்டு வெளிவந்தது.

5. கமல் ஹாசனுடன் சேர்ந்து 18 படங்கள் சேர்ந்து நடித்துள்ளார். அவைகளில் 16 படங்கள் 1975-1979 வரை வெளிவந்தவை.

6. ரஜினியை அறிமுகப்படுத்தியது பாலச்சந்தர் என்றாலும் கூட அவரை அதிகப்படங்களில் இயக்கியது எஸ்.பி.முத்துராமனே. ரஜினியை வைத்து அவர் இது வரை 25 படங்களை இயக்கியுள்ளார்.

7. ரஜினி, அமிதாப் பச்சனின் பல ஹிந்தி படங்களை ரீ-மேக் செய்து நடித்துள்ளார். பில்லா, தீ, படிக்காததவன், மிஸ்டர் பாரத், வேலைக்காரன், பாட்ஷா போன்ற படங்கள் இதில் அடங்கும்.

8. அவர் வள்ளி மற்றும் பாபா என இரு படங்களுக்கு கதை எழுதியுள்ளார். மேலும் மன்னன் மற்றும் வரப்போகும் கோச்சடையான் படங்களுக்காக தன் சொந்த குரலில் பாடலும் பாடியிருக்கிறார்.

9. அவருடைய ஒவ்வொரு படம் வெளிவந்த பின்பு ஓய்வுக்காக இமயமலைக்கு செல்வது அவரின் பழக்கமாகும்.

10. ஸ்ரீ ராகவேந்திரர் அவருடைய நூறாவது படமாகும். படையப்பா அவருடைய நூற்றி ஐம்பதாவது படமாகும்.

11. அவர் நடித்த படங்களிலேயே அவருக்கு பிடித்த படம் 'முள்ளும் மலரும்'. அதை பார்த்து அவருடைய குருநாதர் திரு பாலசந்தர் அளித்த பாராட்டு கடிதத்தை இன்னமும் பத்திரமாக வைத்துள்ளார்.

12. ராக்கி பண்டிகையின் போது பௌர்ணமியன்று பாலச்சந்தரால் தான் சிவாஜி ராவ் என்ற நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக மாறினார்.

13. ஆசியாவில் ஜாக்கி சானுக்கு அடுத்து அதிகப்படியாக சம்பளம் வாங்குபவர் நம் சூப்பர் ஸ்டாரே.

14. ஷூட்டிங்கின் இடைவேளையில் கேரவன் வண்டிக்குள் சென்று ஓய்வு எடுக்கும் பழக்கம் இல்லாதவர் ரஜினி. ஷூட்டிங் முடியும் வரை செட்டில் தான் இருப்பார். ஓய்வு எடுக்க வேண்டும் என்றால் செட்டிலேயே தலையில் ஒரு துண்டை போட்டு மூடி சற்று கண் அயர்வார்.

15. நீண்ட காலம் வரை பியட் மற்றும் அம்பாசடர் காரை மட்டுமே பயன்படுத்தி வந்தார். இப்போதும் கூட ஆடம்பர கார்களை பயன்படுத்தாத மிகவும் எளிய மனிதர்.

16. ஆன்மீகத்தில் அதிக நாட்டமுடையவர். ராகவேந்திரரின் பக்தரான இவர் பாபாஜியை வணங்குபவர். ஓய்வுக்கு இமயமலை செல்லும் இவர், அங்கே அனைவராலும் நுழைந்து விட முடியாத புகழ் பெற்ற பாபாஜி குகையில் தியானத்தில் ஈடுபடுவதுண்டு.

17. ஆன்மீகத்திற்கு அடுத்து அவர் அதிகமாக விரும்புவது சாதாரண மனிதனாக ஊர் சுற்றுவது. அவரை நகரின் சில பகுதியில் மாறு வேடத்தில் காண நேரிடலாம்.

18. தன்னுடைய ப்ரைவசியை தொலைத்து விட்டதால் சில நேரங்களில் சிறையில் அடைபட்ட கைதியை போல் உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

19. தனக்கு மகளாகவும் ஜோடியாகவும் நடித்த ஒரே நடிகை மீனா மட்டுமே.

20. ரஜினியுடன் அதிகமாக ஜோடி சேர்ந்த நடிகை ஸ்ரீ ப்ரியா.

21. 2000-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டாருக்கு பத்மா பூஷன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

22. இவர் முதன் முதலில் தயாரிப்பில் ஈடுபட்ட படம் மாவீரன். இதுவும் கூட அமிதாப் பச்சன் நடித்த ஹிந்தி படத்தின் ரீ-மேக்.

23. தன் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்துள்ளார் சூப்பர் ஸ்டார். அப்படி அவர் செய்தது பாபா மற்றும் குசேலன் ஆகிய படங்களுக்கு.

24. ரஜினிக்கு கருப்பு நிற உடைகளின் மீது ஆர்வம் அதிகம். ஆனால் சமீப காலமாக வெண்ணிற வேஷ்டி சட்டை மற்றும் காவி வேஷ்டியை அதிகமாக அணிகிறார்.

25. ஆன்மீகத்தில் தனக்கிருக்கும் ஈடுபாட்டை பற்றி அவர் இப்படி கூறியுள்ளார் - 'நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!'

Desktop Bottom Promotion