Pongal 2025: இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகை எப்போது? பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?

Pongal 2025: தமிழர்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று தான் பொங்கல் பண்டிகை. அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை விவசாயத்திற்கு உதவும் இயற்கை வளங்களுக்கு நன்றியை தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அதுவும் நான்கு நாட்கள் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த பொங்கல் பண்டிகையின் சிறப்பே கரும்பும், பொங்கலும் தான். இந்த பொங்கலானது புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியைக் கொண்டு, வெல்லம், பால் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டு வாசலில் வண்ணமயமான கோலங்கள் போட்டு, வீட்டில் தோரணங்கள் கட்டி வீடுகளை மக்கள் அழகாக அலங்கரிப்பார்கள்.

Pongal 2025 Date Time Rituals History Celebration And Significance In Tamil

பொங்கல் வரலாறு

பொங்கல் பண்டிகை எதனால் கொண்டாடப்படுகிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். உண்மையில் பொங்கல் பண்டிகையானது சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பண்டைய தமிழ் கலாச்சாரத்தில் உருவான ஒரு நிகழ்வாகும். விவசாயம் நமது பிரதான வேலையாக இருந்த நிலையில், விவசாயிகள் இந்த விவசாயத்திற்கு உதவிய சூரிய பகவான், கால்நடைகள் மற்றும் பிற இயற்கை வளங்களுக்கு நன்றியை தெரிவிக்க, இந்நாளில் அறுவடை செய்த புதிய அரிசியைக் கொண்டு பொங்கல் செய்து, அதை படைத்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில், இந்த பழக்கம் பொங்கல் பண்டிகையாக மக்களால் கொண்டாடப்பட்டு வந்தது.

2025-ல் பொங்கல் எப்போது மற்றும் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?

பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும். அதுவும் தமிழ் மாதமான தை 01 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் பொங்கல் வைக்க உகந்த நேரம் என்றால், அது காலை 07.55 முதல் 09.29 வரை ஆகும்.

4 நாள் பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணத்திற்காக கொண்டாடப்படுகிறது.

போகிப்பண்டிகை - 2025 ஜனவரி 13, திங்கட்கிழமை

தைப்பொங்கல் - 2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை

மாட்டுப்பொங்கல் - 2025 ஜனவரி 15, புதன்கிழமை

காணும் பொங்கல் - 2025 ஜனவரி 16, வியாழக்கிழமை

போகிப்பண்டிகை (ஜனவரி 13, 2025)

பொங்கல் பண்டிகையின் முதல் நாள் கொண்டாடப்படுவது தான் போகிப் பண்டிகை. இந்த பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் விவசாயத்திற்கு உதவிய இந்திரனை வணங்குவார்கள். மேலும். இந்நாளில் தான் அறுவடை செய்த அரிசியை வீட்டிற்கு கொண்டு வருவார்கள். மேலும் இந்நாளில் மக்கள் வீட்டில் இருக்கும் உபயோகப்படாத பொருட்களை எரிப்பதோடு, வீட்டை சுத்தம் செய்வார்கள்.

பொங்கல் பண்டிகை (ஜனவரி 14, 2025)

பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாள் கொண்டாடப்படுவது தான் தைப்பொங்கல். சொல்லப்போனால், இது தான் முக்கியமான நாள். இந்த பொங்கல் தமிழ் மாதமான தை முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் அறுவடை செய்த அரிசியை கொண்டு பொங்கல் செய்து, விவசாயத்திற்கு உதவிய சூரிய பகவானுக்கு முதலில் பொங்கல் வைத்து, படைத்து நன்றி செலுத்தி வழிபாடு செய்வார்கள்.

மாட்டுப்பொங்கல் (ஜனவரி 15, 2025)

பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளில் விவசாயத்திற்கு உதவிய மாடுகள் மற்றும் பிற கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் கால்நடைகளை அழகாக அலங்கரித்து, அவற்றிற்கு பொங்கல் வைத்து படைப்பார்கள்.

காணும் பொங்கல் (ஜனவரி 16, 2025)

காணும் பொங்கல் பண்டிகையானது ஓய்வின்றி உழைத்த விவசாயிகள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு சென்று ஒன்றாக நேரத்தை செலவிடுவார்கள். முக்கியமாக இந்நாளில் தான் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்கள் நடைபெறும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, January 8, 2025, 17:07 [IST]
Desktop Bottom Promotion