நவராத்திரி மூன்றாம் நாளில் சந்திரகாந்தா தேவியின் ஆசியைப் பெற எப்படி வழிபடணும் தெரியுமா?

Navratri 2025 Day 3 Chandraghanta: நவராத்திரியின் மூன்றாம் நாளில் பூஜிக்கப்படும் துர்கா தேவியின் வடிவம் என்றால், அது சந்திரகாந்தா தேவியாகும். "சந்திரகாந்தா" என்ற பெயருக்கு "மணி போன்ற பிறை வடிவத்தைக் கொண்டவள்" என்று பொருள். துர்கையின் இந்த வடிவம் நெற்றியை அலங்கரிக்கும் தனித்துவமான பிறை நிலவைக் குறிக்கிறது.

இந்து புராணங்களின் படி, பிரம்மச்சாரிணி அவதாரத்திற்கு பின், பார்வதி தேவி சிவபெருமானை திருமணம் செய்ய முடிவு செய்தார். அந்த நேரத்தில் மகிஷாசுரன் தேவலோகம் உட்பட முழு பிரபஞ்சத்தையும் கைப்பற்ற முயற்சித்துக் கொண்டிருந்தான். மகிஷாசுரனால் சந்திக்கும் துன்பத்தை கண்ட பார்வதி தேவி, அசுரனை எதிர்த்துப் போராடி அமைதியையும் நல்லிணக்கத்தையும் மீட்டெடுக்க சந்திரகாந்தா தேவியாக மாற்றிக் கொண்டார்.

Navratri 2025 Day 3 Chandraghanta Puja Time Prasadam Rituals Mantra And Color Of The Day

சந்திரகாந்தா தேவி ஒரு கடுமையான போர்வீரனைப் போன்ற வடிவத்தை எடுத்தார். அதுவும் 10 கைகளுடன், ஒவ்வொரு கையிலும் வாள்கள், அம்புகள், திரிசூலங்கள் மற்றும் தாமரை மலர் போன்ற பல்வேறு ஆயுதங்களை ஏந்தியிருந்தார். இவரது மூன்றாவது கையில் மணி வடிவ பிறை நிலவை கொண்டிருப்பார். இது சுற்றுப்புறத்தை நேர்மறை ஆற்றலால் நிரப்புகிறது.

பார்வதி தேவி சந்திரகாந்தா தேவியாக மாறும் போது அவளது கர்ஜனை இடிமுழக்க மணியைப் போல எதிரொலித்ததாகவும், அதைக் கண்டு மகிஷாசுரனும் அவனது படையும் பயத்தால் நடுங்கியதாகவும் புராணங்கள் கூறுகின்றன. சந்திரகாந்தா தேவிக்கும் மகிஷாசுரனின் படைகளுக்கும் இடையே ஒரு கடுமையான போர் நடந்தது. அவளுடைய வீரமும் தெய்வீக ஆயுதங்களும் தடுக்க முடியாதவையாக நிரூபிக்கப்பட்டன. இறுதியில் சந்திரகாந்தா தேவி மகிஷாசுரனை வென்று பிரபஞ்சத்தைக் காப்பாற்றினார்.

சந்திரகாந்தா தேவியின் வடிவம்

பார்வதி தேவியின் மூன்றாவது வடிவமான சந்திரகாந்தா தேவி துணிச்சல், தைரியம், அமைதி மற்றும் அழகைக் குறிக்கிறாள். மேலும் அவள் 10 கைகளில் ஆயுதங்களை ஏந்தியவாறு, நெற்றியில் பிறை நிலவுடன் சிங்கம் அல்லது புலி மீது சவாரி செய்வதாகக் காட்டப்படுகிறாள்.

சந்திரகாந்தா தேவியின் நிறம்

சந்திரகாந்தா தேவிக்கான நிறம் ராயல் நீலம். இந்த நீல நிறம் துணிச்சல், அமைதி மற்றும் தெய்வீக ஆற்றலை பிரதிபலிக்கிறது. மேலும் இது தேவியின் கடுமையான, அதே சமயம் அமைதியான தன்மையை சித்தரிக்கிறது. நவராத்திரியின் மூன்றாம் நாளில் சந்திரகாந்தா தேவியின் ஆசியைப் பெற விரும்பினால் நீற நிற ஆடைகளை அணியுங்கள்.

சந்திரகாந்தா தேவிக்கான மலர்

சந்திரகாந்தா தேவிக்கு உகந்த பூ சாமந்தி. எனவே நவராத்திரியின் மூன்றாம் நாளில் சந்திரகாந்தா தேவிக்கு சாமந்தி பூவை படைத்து வழிபாடு செய்வது நல்லது. இதனால் எதிரிகளின் ஆபத்துகளிலிருந்து விடுதலை கிடைக்கும் மற்றும் துணிச்சல் அதிகரிக்கும். ஏனெனில் சந்திரகாந்தா தேவி தைரியம் மற்றும் துணிச்சலின் அடையாளம்.

சந்திரகாந்தா தேவிக்கான பிரசாதம்

சந்திரகாந்தா தேவிக்கு பால் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்படும் பலகாரங்கள் மிகவும் பிடிக்கும். எனவே பால் பாயாசம், பால் அல்வா, தயிர் சாதம் போன்றவற்றை படைத்து வழிபடுவது நல்லது.

சந்திரகாந்தா தேவிக்கான மந்திரம்

"ஓம் ஹ்ரீம் க்லீம் ஶ்ரீம் சந்திரகாந்தாய நமஹ"

இந்த சந்திரகாந்தா தேவிக்கான மந்திரத்தை நவராத்திரியின் மூன்றாம் நாளில் பாராயணம் செய்தால், சந்திரகாந்தா தேவியின் அருளால் துணிச்சல், தன்னம்பிக்கை போன்றவை அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, September 24, 2025, 8:00 [IST]
Desktop Bottom Promotion